Saturday, May 12, 2007

ஓன்பது மாதங்களின் பின் யாழ். பல்கலைக்கழக மாணவன் பகீரதன் விடுதலை.!!!

[சனிக்கிழமை, 12 மே 2007] சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவன் சிவராஜ் பகீரன் ஒன்பது மாத கால தடுப்புக்காவலுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு தலைமை நீதிபதி சரோஜினி குசல வீரவர்த்தனவினால் நேற்று வெள்ளிக்கிழமை அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவசரகாலச் சட்ட விதிகளின் படி பகீரதனை கைது செய்வதற்கு அல்லது பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் மூலம் அவரை தடுத்து வைப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று நீதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து பகீரதன் விடுதலை செய்யப்பட்டார். பகீரதனை கொழும்பு நீதிமன்றத்தில் நிறுத்துமாறு பிரதம நீதியரசர், பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வுத்துறைக்கு உத்தரவிட்டதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் நேற்று முன்னிறுத்தப்பட்டார். சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பின் அலுவலகத்தில் பகீரதன் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யும் போது மக்கள் விடுதலை இராணுவம் என்னும் அமைப்பின் துண்டுப்பிரசுரங்களை அவர் வைத்திருந்ததாக இராணுவம் அவர் மீது குற்றம் சுமத்தியிருந்தது. காங்கேசன்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பகீரதன் பின்னர் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவரது விடுதலை தொடர்பாக சட்டத்தரணிகளான அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும் தனபாலசிங்கம் ஜனகன் ஆகியோர் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.