[செவ்வாய்க்கிழமை, 1 மே 2007] கொலன்னாவ எண்ணெய்க்குதங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்குண்டுகள் துல்லியமாகத் தாக்கியிருந்தால் பேரழிவு ஏற்பட்டிருக்கும் என்று சிறிலங்காவின் முன்னாள் வான்படை அதிகாரியான விங் கொமாண்டர் சி.ஏ.ஓ டிர்க்சி எச்சரித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு "புலிகளின் வான்வழித் தாக்குதல்களை முறியடிப்பது" தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது: கட்டுநாயக்க மீதான வான்தாக்குதல் அதன்பின்னர் கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல பகுதிகள் மீது விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட வான்தாக்குதல்கள் தற்போது நடைபெறும் மோதல்களை மிகவும் பயங்கரமான கட்டத்திற்கு நகர்த்தியுள்ளன. தமிழீழ விடுதலைப்புலிகளின் வான்கலங்கள் குண்டுவீச்சுக்களை நடத்திவிட்டு மீண்டும் அவர்களின் தளத்திற்கு திரும்பிச் செல்வது எமது தற்போதைய வான்பாதுகாப்பு முறைகள் போதுமானவை அல்ல என்பதனைக் காட்டுகின்றது. இது ஆபத்தானது எனவே சீர்செய்யப்பட வேண்டும். விடுதலைப் புலிகளின் வான்படையை பொறுத்தவரை அவர்களிடம் 2 அல்லது 3 இலகுரக வானூர்திகள் இருக்கலாம். மேலும் போதுமான பொறியியல் வசதிகளும், மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சி வசதிகளும் உண்டு. அவர்களின் வானூர்தி 1,300 முதல் 2,000 கி.மீ தூரம் பறக்கும் தன்மையை கொண்டதுடன், 1 மணிநேரத்திற்கு 260 முதல் 460 கி.மீ தூரம் பறக்கும் வேகத்தையும் கொண்டதாகும். இதற்கு 550 முதல் 650 மீ தூர ஓடுபாதை போதுமானதாகும். ராடார்களின் திரையில் விழாதவாறு மிகக் குறைந்த உயரத்திலும் பறக்கக்கூடியன. சிறிலங்கா அரசாங்கத்தின் தற்போதைய வான் எதிர்ப்பு தொகுதிகள் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகளை கொண்டவை. இவை வான்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், அரச தலைவரின் இல்லத்தை பாதுகாப்பதற்காக அதனை சுற்றியுள்ள உயரமான கட்டங்களிலும் சில பொருத்தப்பட்டுள்ளன. ஏனைய இலக்குகள் தரைப்படையினரால் சிறிய ஆயுதங்களைக்கொண்டு பாதுகாக்கப்படுகின்றன. சிறிய ஆயுதங்களால் இலகுரக வான்கலங்களை தாக்க முடியும் என்பதற்கு உதாரணமாக எனது அனுபவம் ஒன்றைக் கூறலாம். யாழ். பலாலி வான்படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட டி.சி 3 என்னும் வானூர்தியின் யன்னல் ஓரம் நான் உட்கார்ந்திருந்தேன். 600 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த வானூர்தியின் மீது விடுதலைப் புலிகள் சிறிய ரக ஆயுதங்களை கொண்டு தாக்கினார்கள். துப்பாக்கியின் ஓசை எனக்கு கேட்டது. மூன்று முறை தரையில் இருந்து சுட்டார்கள். மூன்றாவது சூடு வானூர்தியின் வலது இறக்கையில் துளையை ஏற்படுத்தியது. அது நான் அமர்ந்திருந்த பகுதியில் இருந்து 10 அடி தூரமாகும். அந்த வானூர்தி, தரையில் இருந்து நடத்தப்பட்ட சிறிய ரக ஆயுதங்களின் தாக்குதலுக்கு உட்பட்டது. முதலாவது சூட்டுக்கும் மூன்றாவது சூட்டுக்கும் இடைப்பட்ட நேரம் 5 செக்கன்கள் ஆகும். அதன் மூலம் விடுதலைப் புலிகளின் துப்பாக்கிதாரி வானூர்தியை 5 செக்கன்களுக்கு மேல் தொடர்ச்சியாக அவதானித்துள்ளது தெரிகின்றது. எனவே இலகுரக வானூர்திகளை சிறியரக ஆயுதங்களால் தாக்கி அழிப்பது சாத்தியமானது. இதன் மூலம் இரு தகவல்கள் பெறப்பட்டுள்ளன. - விடுதலைப் புலிகளின் வான்கலங்கள் தமது இலக்குகளை அழிப்பதற்காக மிகத் தாழ்வாகப் பறப்பவை. எனவே அவை சிறிய ரக ஆயுதங்களின் வீச்சு எல்லைக்குள் உட்படக்கூடியவை. - அவற்றின் வேகம் ஒரு செக்கனுக்கு 75 முதல் 125 மீற்றர்கள். எனவே துப்பாக்கிதாரியின் கண்களுக்கு சிறிய நேரத்திற்கு புலப்படக்கூடியவை. மேலும் இந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கியாளர் மிகுந்த தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்ட முதல் இரு இலக்குகளும் இராணுவ இலக்குகள். ஆனால் மூன்றாவது இலக்கு பொருளாதார மையம். இது அவர்களால் தெற்கில் எந்த இலக்கையும் இலகுவாக தாக்க முடியும் என்பதை காட்டுகின்றது. ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தினால் எல்லா இலக்குகளையும் பாதுகாப்பது இயலாத காரியம். எனினும் உயர்ந்த ரக பொருளாதார மையங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல பகுதியின் இலக்குகள் மிகவும் ஆபத்தானவை. வானோடிகள் இலக்குகளை தவறவிட்டது எமக்கு கிடைத்த அதிர்ஸ்டம். ஆனால் நாம் மீண்டும் இந்த அதிர்ஸ்டத்தில் தங்கியிருக்க முடியாது. கொலன்னாவ எண்ணெயக்குதங்கள் பகுதியை குண்டுகள் துல்லியமாக தாக்கியிருந்தால் 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற தரைத் தாக்குதலை விட அழிவுகள் பலமாக இருந்திருக்கும். அதனைப் போல பல பொருளாதார இலக்குகள் உள்ளன. ஆனால் இதில் கவலை தரும் விடயம் என்னவெனில், அனைத்து இலக்குகளும் ஒன்றுக்கு ஒன்று அண்மையாக கூட்டமாக இருப்பதாகும். இது அழிவை பலமடங்கு பெரிதாக்கி விடும். இந்த கூட்டமான இலக்குகள் வானூர்திகளின் தரிப்பிடங்கள் போன்று மிகவும் கடினமான இலக்குகள் அல்ல. மிகக் குறைந்த பயிற்சிகளை உடைய வானோடிகளினால் கூட இவற்றின் மீது குண்டுகளை வீச முடியும். விடுதலைப் புலிகளின் வானோடிகள் ஒவ்வொரு தடவை குண்டுகளை வீசும் போதும் அனுபவங்களையும், பயிற்சிகளையும் பெற்று வருகின்றனர். எனவே எதிர்காலத்தில் எமக்கு அதிர்ஸ்டம் கிடைக்கப்போவதில்லை. பொருளாதார இலக்குகள் சிறியரக ஆயுதங்களால் தான் பாதுகாக்கப்படுகின்றன. எனவே இராணுவ இலக்குகள் அல்லாத பாரிய அழிவைத் தரக்கூடிய இலக்குகள் தாக்குதலுக்கு சுலபமாக உட்படும் தன்மையுடன் உள்ளன. இராணுவ இலக்குகளானவை வான் எதிர்ப்பு தொகுதிகளினால் பாதுகாக்கப்படுகின்ற போதும் எம்மால் அதன் திறமையை இன்றுவரை நிரூபிக்க முடியவில்லை. எனவே சிறிய ரக ஆயுதங்களின் மூலம் இலகுரக வானூர்திகளை சுட்டுவீழ்த்துவதற்கான படி முறைகளாக நாம் பின்வருவனவற்றை முன்வைக்கிறோம். துப்பாக்கிதாரரை நிறுத்துமிடம்: வானூர்தியை மிகவும் இலகுவாக அவதாக்கக்கூடிய இடத்தில் துப்பாக்கி படையினர் நிறுத்தப்பட வேண்டும். முன் எச்சரிக்கை: துப்பாக்கியாளர் தன்னை தயார்படுத்திக் கொள்ள அவகாசம் எடுத்துக் கொள்ளும் படி வானூர்திகளின் வரவுகள் தொடர்பான முன்னறிவித்தல்கள் கொடுக்கப்பட வேண்டும். இதனை ராடார்கள் மூலம் பெறலாம் அல்லது முன்னனி கண்காணிப்பு நிலைகளில் இருந்து பெறலாம். துப்பாக்கிதாரியின் பார்வைப் புலத்தில் வானூர்தியின் காலம்: எதிரியின் வானூர்தி துப்பாக்கிதாரியின் பார்வைப்புலத்தில் எவ்வளவு நேரம் இருக்கும் என்பது அவரது நிலையிடம், நிலைகொண்டுள்ள கோணப்புள்ளி, வானூர்தியின் உயரம் மற்றும் வேகத்தில் தங்கியுள்ளது. துப்பாக்கிதாரி வானூர்தியை குறிவைத்து ஒரு முறையாவது தாக்குதலை நடத்துவதற்கான காலம் இதுவாகும். துப்பாக்கியாளருக்கான பயிற்சி: துப்பாக்கியாளர் தனது முதலாவது தாக்குதலில் வானூர்தியை வீழ்த்தக்கூடியவராக போதுமான பயிற்சிகள் வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். துப்பாக்கியாளரின் ஒழுக்கம்: துப்பாக்கியாளர் தனது கண்ணில் வானூர்தி படும் வரை துப்பாக்கியை இயக்கக்கூடாது. குறிப்பாக மக்கள் நிறைந்துள்ள நகரங்களில் இத்தகைய ஒழுக்கமின்மை பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்திவிடும். வானூர்தியை வீழ்த்தும் இடம்: வானூர்தி வீழ்த்தப்படும் போது அது குண்டுகளை கொண்டிருப்பின் வானோடி குண்டுகளை கழட்டிவிடலாம் அல்லது அதனுடன் வந்து மோதலாம் இது பேரழிவை ஏற்படுத்தும். எனவே வானூர்தியை கடலுக்கு மேல் வைத்து வீழ்த்துவதே உகந்தது. எனினும் அது அதன் பாதையில் தங்கியுள்ளது. வானூர்தியை நோக்கி வெளிச்சம் பாய்ச்சல்: விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்கள் இரவிலேயே நடைபெறுகின்றன. எனவே வானூர்தியை பார்ப்பது கடினமானது. வானூர்திப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் மிகவும் சக்திவாய்ந்த தேடுதல் வெளிச்சங்களை கொண்டுள்ளது. அது சுழற்றக்கூடியது. நாம் இத்தகைய வெளிச்சங்களை உயர்ந்த கட்டடங்களில் பொருத்தி வானூர்தியை அடையாளம் காண்பதுடன் அதன் நகர்வின் மீது வெளிச்சத்தை நிலை நிறுத்த வேண்டும். இந்த படிமுறைகள் சிறிய ஆயுதங்களினால் இலகுரக வானூர்திகளை வீழ்த்துவதற்கு முக்கியமானவை. விடுதலைப் புலிகளின் மூன்று வான் தாக்குதல்களும் அவை ஏற்படுத்திய சேதங்களை விட படையினருக்கு கொடுத்த அழுத்தங்கள் தான் அதிகம். எனவே இந்த தொந்தரவுகள் உடனடியாக அழிக்கப்பட வேண்டும். ஏனெனில் விடுதலைப் புலிகள் தமது உத்திகளை மாற்றி பொருளாதார மையங்களை அதிகளவில் தாக்கினால் பெரும் அழிவுகள் ஏற்பட்டுவிடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி:புதினம்
Tuesday, May 01, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.