Sunday, April 01, 2007

கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலையில் தொடர்புபடுத்துவது விசமப் பிரச்சாரம்: இளந்திரையன் கடும் கண்டனம்

[ஞாயிற்றுக்கிழமை, 1 ஏப்ரல் 2007]


தமிழ்நாடு கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலையில் எம்மைத் தொடர்புபடுத்துவது விசமப் பிரச்சாரம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் "புதினத்துக்கு" அவர் தொலைபேசி ஊடாக அளித்த நேர்காணல்:

கன்னியாகுமரி மீனவர்களை கடந்த 29 ஆம் நாள் சிறிலங்கா அரச படையினர் கொடூரமான முறையில் கொலை செய்ததனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

எங்களது தொப்புள் கொடி உறவுகளான தாய் தமிழக உறவுகளின் வேதனைகளிலே நாங்களும் பங்கு கொள்கின்றோம்.

சிறிலங்கா அராஜக அரசு, தனது இனவெறித் தனத்தை ஈழத் தமிழர்களுடன் மட்டுமல்லாது இந்தியாவை நோக்கியும் வியாபித்திருப்பது மிகவும் வேதனைக்குரியதும் கண்டிக்க வேண்டியதுமான விடயமாகும்.

சிறிலங்கா கடற்படையானது தாய்த் தமிழக உறவுகளைக் கொல்வது இது முதல் முறையல்ல.

இப்படுகொலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

சிறிலங்காவின் இனவெறிப் போக்கானது நாடு தாண்டியும் உலகத் தமிழர்களை நோக்கி வியாபித்திருப்பதையே இது காட்டுகிறது.

தாயகத் தமிழ் உறவுகளும் ஈழத் தமிழர்களும் இணைந்து நல் உறவைப் பேணுவதையும் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்கள் மீதான அனுதாப அலைகள் உருவாவதையும் விரும்பாத மற்றும் கொச்சைப்படுத்த வேண்டும் என்கிற தீய சக்திகளுடன் இப்படுகொலைகளை மூடி மறைக்க வேண்டும் என்று கருதுகிற சிறிலங்கா அரசும் இணைந்து இச்சம்பவத்தில் எங்களை தொடர்புபடுத்தி மிக மோசமான விசமப் பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர்.

இது மிகவும் ஒரு மோசமான அணுகுமுறையாகும். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தாய்த் தமிழக உறவுகளும் ஈழத் தமிழ் உறவுகளும் ஒரே இரத்தமாக இருப்பதால் ஒன்றாக இணைந்து நம்முடைய உறவைப் பேணுவதன் மூலம் இத்தகைய தீய சக்திகளுக்கும், நாடு இன பேதமின்றி தமிழ் மக்களை குறிவைத்துப் படுகொலை செய்கின்ற சிறிலங்கா அரசுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என்றார் இளந்திரையன்.

மேலும் இந்தியா- சிறிலங்கா கூட்டு கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையை மேற்கொள்ளும் சதித் திட்டத்தைச் செயற்படுத்தும் வகையில் இத்தகைய விசமப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.