Monday, April 30, 2007

இலங்கை விவகாரத்தில் இந்தியா விரைவில் தீர்க்கமான முடிவெடுக்கும் வழிவகைகளை பரிசீலிக்கிறது புதுடில்லி.

[திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007]

இலங்கை இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்டுள்ள இருதரப்பினரும் போர் மூலமே முடிவு காண்பது என்ற தீர்மானத்துக்கு வந்துள்ள இன்றைய இருள் சூழ்ந்த காலகட்டத்தில் என்ன விதமான நடவடிக்கையில் தான் இறங்க முடியும் என்பது பற்றி மிக விரைவில் இந்திய அரசு ஒரு முடிவுக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பல்வேறு விதமான யோசனைகள் தற்பொழுது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு புதுடில்லிச் செய்தி வட்டாரங்கள் தகவல்வெளியிட்டிருக்கின்றன.

இனப்பிரச்சினை விரிவடைந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் வெகுவாகப் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதில் இந்தியா அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.

2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட இலங்கை இன முரண்பாட்டினால் ஆயிரக்கணக்கானோர் வீடுவாசல்களை இழந்து அகதிகளாகியுள்ளனர். இந்த நிலையில் இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை ஒரு தீர்வாக அமையமாட்டாது என்பதில் இந்தியாவின் உயர்மட்ட சிந்தனையாளர்கள் தீர்க்கமாகவுள்ளனர்.

கஷ்டங்களுக்குள்ளாகும் மக்களின் பெரும்பாலும் தமிழ் மக்களின் துன்ப துயரங்கள் இந்திய அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விடயத்தில் இந்திய அரசு இலங்கை அரசுடன் அடிக்கடி தொடர்புகொண்டு வந்துள்ளது.

எமக்கென்ற சில கருத்துகள் உண்டு, கவலைகள் உண்டு. அவைகளை இலங்கை அரசுக்குத் தெரிவித்து வந்துள்ளோம். என்றவாறு இந்திய உயர்மட்ட பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர்ந்த ஏனைய தரப்புகளுடன் இந்திய அதிகாரிகள் தொடர்பு கொண்டிருப்பதாகவும் தெரியவருகின்றது. இடம்பெயர்ந்துள்ள மக்களின் பிரச்சினை தொடர்பாக இந்தியா இன்னும் அதிக முனைப்புடன் செயற்படவேண்டும் என்ற கருத்து இங்கு நிலவுகின்றது.

இதேவேளை இலங்கை மலையகத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் நிறைந்துள்ள பகுதிகளில் வளர்ச்சித்திட்டங்களை முன்னெடுப்பது பற்றியும் இந்திய அரசு ஆலோசிப்பதாகத் தெரிகின்றது.

கடந்த 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவு செயலாளர் ஷியாம் சரண், வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மக்களின் நலன்களிலும் மேம்பாட்டிலும் இந்தியாவுக்கு நெருக்கமாக அக்கறை உண்டு என்று தெரிவித்தார்.

இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் நோர்வே அனுசரணையில் செய்துகொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்பாடு மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில், அடுத்து என்ன? என்பதே இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் சிந்தனையை இப்போது குடைந்து கொண்டிருக்கும் கேள்வி.

இலங்கைவாழ் தமிழர்களில் பெரும்பாலானவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றே பேச்சுகள் மூலமான ஒரு இறுதித் தீர்வினைக் கொண்டுவரமுடியும் என்றும் இந்தியா கருதுகின்றது. இவ்வாறு புதுடில்லி செய்திகள் தெரிவித்தன.

[uthayan.com]

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.