Wednesday, April 25, 2007

சிறிலங்கா அரசு கூறிவந்த பொய்களை உடைத்த விடுதலைப் புலிகள்: ரணில் விக்கிரமசிங்க.!!

[புதன்கிழமை, 25 ஏப்ரல் 2007]


பாதுகாப்பு தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கூறிவந்த பொய்கள் நேற்றைய தினம் விடுதலைப் புலிகள் நடத்திய வான்தாக்குதலால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் முடக்கப்படுவது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க, ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் உள்ள அனைத்துலக ஊடக நிலையத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியியுள்ளார்.

இது தொடர்பாக விளக்கமளிப்பதற்காக அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

மனித உரிமை மீறல், ஊடக சுதந்திரப் பாதுகாப்பு, பாதுகாப்பு விடயங்களை அரசாங்கம் பொய்களைக் கூறி தொடர்ந்தும் உண்மைகளை மூடி மறைக்கப்பார்க்கின்றது.

ஆனால் உண்மைகளை நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது. பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் கூறிவந்த பொய்கள் நேற்றைய தினம் விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதலால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கட்டுநாயக்க தாக்குதலின்போது நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகியதை சுட்டிக்காட்டிய நாம், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தினோம்.

இதற்காக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுத்தோம். ஆனாலும் நாட்டின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை எனக்கூறிய அரசாங்கம், இனி விடுதலைப் புலிகள் வான் தாக்குதலுக்கு எத்தனித்தால் அவர்களின் வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்படும் எனவும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியது.

ஆனால் நேற்றைய தினம் என்ன நடந்தது.

விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்திலுள்ள முக்கிய இராணுவத்தளம் மீது தாக்குதல் நடத்திவிட்டு பாதுகாப்பாக திரும்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் ஒன்றே அரசாங்கம் கூறிவரும் தொடர் பொய்களுக்கு சிறந்த சான்றாகும்.

எனவே, இவற்றுக்கு எதிராக போராட ஐக்கிய தேசியக் கட்சி களத்தில் இறங்கியுள்ளது. இதற்காக நாங்கள் மக்களோடு இணைந்து போராடவுள்ளோம்.

ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக போராடுவதற்கு எம்முடன் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்றார் அவர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.