Tuesday, April 24, 2007

சிறிலங்கா அரசு சட்ட ஒழுங்கை மதிப்பதில்லை: அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழு.!!

[செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2007] ஆழிப்பேரலை நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வந்த பிரான்ஸ் நாட்டு தொண்டர் அமைப்பான பட்டினிக்கு எதிரான அமைப்பின் 17 பணியாளர்களின் படுகொலைகள் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகள் மிகவும் தவறான முறையில் நடைபெற்று வருவதாகவும், இலங்கைத்தீவில் சட்டம் ஒழுங்கு மிகவும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழு நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் இந்த நிறுவனத்தின் பணியாளர்கள் மூதூரில் மிகவும் அருகாமையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். சிறிலங்கா அரசாங்கமானது, இந்த கொலைகள் தொடர்பான விசாரணைகளில் ஆதரவாகவோ, தெளிவாகவோ, செயற்திறன் மிக்கதானவோ நடந்து கொள்ளவில்லை. காவல்துறையினர் ஒரு இராணுவத்தினரைக் கூட விசாரணை செய்யவேண்டும் என்று அக்கறை கொள்ளவில்லை என சுவிற்சர்லாந்தை தளமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழுவின் பொதுச் செயலாளர் நிக்கொலஸ் ஹவென் தெரிவித்துள்ளதாவது: நாம் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளோம். இது தொடர்பான கடுமையான கவலைகள் சிறிலங்காவில் மட்டுமல்ல அனைத்துலகத்திலும் எதிரொலித்துள்ளது. சிறிலங்காவில் உள்ள குற்றவியல் நீதித்துறையின் திறமைக்கும் அதனால் வழங்கப்படும் தீர்ப்பிற்கும் இது ஒரு நல்ல உதாரணம். விடுதலைப் புலிகளினாலும் மனித உரிமைகள் மீறப்படுகின்றன, ஆனால் எமக்கு அதிர்ச்சியான விடயம் என்னவெனில் சிறிலங்கா அரசாங்கம் சட்டம், ஒழுங்கை மதிப்பதில்லை என தெரிவித்தார். சிறிலங்காவில் கடத்தல்கள், நீதிக்குபுறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்கள் கடந்த வருடத்தின் பின்னர் வெகுவாக அதிகரித்துள்ளதாக அனைத்துலக நீதியாளர்களின் ஆணைக்குழு உட்பட பல மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திவரும் போதும் அவர்கள் அதனை மறுத்தும் வந்துள்ளனர். பிரான்ஸ் தொண்டர் அமைப்பின் பணியாளர்களின் படுகொலை 2003 ஆம் ஆண்டு ஈராக்கில் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பின்னர் நடந்த மிகவும் மோசமான ஒரு தாக்குதலாகும். ஆனால் மூதூரில் பலியானவர்களில் அனைத்துலகத்தை சேர்ந்தவர்கள் இல்லாததால் அது ஈராக்கை போல் உலகில் அதிக கவனத்தை பெறவில்லை. அங்கு படுகொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுபான்மையின தமிழ் மக்களாவார்கள். கொல்லப்பட்ட பணியாளர்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் பணியாற்றி வருவதனால் அவர்களது குடும்பத்தினர் கொலைகளுக்கு இராணுவமே பொறுப்பு என கூறியுள்ளனர். கொலை இடம்பெற்ற இடத்திற்கு செல்வதற்கு கண்காணிப்புக்குழுவை அரசாங்கம் அனுமதிக்காததால் இந்த கொலைகள் அரசாங்கத்தின் வன்முறை என கண்காணிப்புக் குழு கூறியுள்ளது. அரசாங்கம் இதனை மறுத்து வருவதுடன் தனது வாதத்தை பாதுகாப்பதற்காக அரச தலைவர் விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.