Monday, April 23, 2007

போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகி போர்ப் பிரகடனம் செய்ய சிறிலங்கா அரசு முடிவு!

[திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2007] போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகி முழு அளவில் போர்ப் பிரகடனம் செய்ய சிறிலங்கா அரசாங்கம் விரும்புவதே உண்மை நிலைப்பாடு என்று கொழும்பு படைத்துறை ஆய்வாளர் ஒருவர் தெரிவத்துள்ளார். அனைத்துலகின் முழு ஆதரவுடனும் நோர்வேயின் அனுசரணையுடனும் தொடங்கப்பட்ட சமாதான முயற்சியின் அடித்தளமே இந்தப் போர்நிறுத்த உடன்பாடுதான். விடுதலைப் புலிகளின் பலத்தின் அடிப்படையிலேயே இந்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. ஆனால், விடுதலைப் புலிகள் இன்று பலமிழந்து விட்டதாகக் கருதும் சிறிலங்கா அரசாங்கம், இந்த உடன்பாடானது படையினரின் நடவடிக்கைகளுக்கு மிகப் பெரும் தடையாக இருக்குமெனக் கருதுகிறது. ஆனாலும், இந்த உடன்பாட்டிலிருந்து ஒரு தலைப்பட்சமாகத் தான் விலகிவிடுவதை அரசாங்கம் விரும்பவில்லை. உடன்பாட்டின்படி 14 நாள் முன்னறிவித்தலை கொடுத்துவிட்டு விலகிவிடலாம். ஆனால், அது அனைத்துலக ரீதியில் தங்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுமெனக் கருதும் அரசாங்கம், அதனை மக்களைக் கொண்டு இரத்துச் செய்ய விரும்புகிறது. போர் நிறுத்த உடன்பாடு தொடர்பாக மக்கள் வாக்கெடுப்பை நடத்தி அதன் மூலம் உடன்பாட்டை நிராகரித்துவிடத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், மக்கள் ஏற்காத உடன்பாட்டை தாங்களும் ஏற்கப் போவதில்லையெனக் கூறி அதிலிருந்து விலகி முழு அளவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இறங்கிவிடலாம் என்று கருதுகின்றது. அண்மையில் தென்னிலங்கையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வு காணப்பட வேண்டும் என்று பெருமளவு மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். கிழக்கில் அண்மைக்காலமாக படையினர் வெற்றி பெற்றதாகக் கூறப்படுவதும் தற்போதைய போர் முனைப்புகளுமே தென்னிலங்கை மக்களை இராணுவத் தீர்வுக்கு ஆதரவு வழங்கச் செய்துள்ளது. இந்த மக்கள் கருத்துக் கணிப்பும் போர் நிறுத்த உடன்பாடு தொடர்பாக மக்கள் வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கத்தை தூண்டியுள்ளது. இதன்மூலம் சமாதான முயற்சிகளை விடுத்து விடுதலைப் புலிகளுக்கு எதிராக முழு அளவில் போரைத் தொடுக்க சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்து விட்டது தெளிவாகிறது என்று அந்த ஆய்வாளர் தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளிலிருந்தும் வாங்கிக் குவித்துள்ள ஆயுதங்களை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்திவிட வேண்டும் என்பதில் அரசாங்கம், முனைப்புக் காட்டுகிறது. மக்களே சமாதான முயற்சியை விரும்பாது பயங்கரவாதத்தை பூண்டோடு அழிக்குமாறு அனுமதி வழங்குகையில் பேச்சுக்கான தேவையில்லை என வெளிப்படுத்தவும் சிறிலங்கா அரசாங்கம் விரும்புகின்றது. போர் நிறுத்த உடன்பாடானது மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தோற்கடிக்கப்பட்டால், அது சமாதான முயற்சிகளை முழுமையாக நிராகரிக்கும் செயல் என்பதுடன் வடக்கு - கிழக்கில் முழு அளவிலான போருக்கு அரசாங்கத்துக்கு கிடைக்கும் மக்கள் அங்கீகாரமாகவே கருதப்படும். அனைத்துலக ரீதியிலும் இதனை நியாயப்படுத்த அரசாங்கமும் முயலும். போர் நிறுத்த உடன்பாட்டை நிராகரித்து போருக்கு அங்கீகாரம் வழங்கும் தென்னிலங்கை மக்களின் செயலானது வடக்கு - கிழக்கில் மட்டுமே போர் நடைபெற வேண்டும் என்பதை அங்கீகரிப்பதாக இரு அது முழு நாட்டுக்கும் உரியதாயிருக்கும் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்றும் அவர் குறிபிட்டுள்ளார். நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.