Sunday, April 22, 2007

எண்ணிக்கை தெரியாத பறப்புக்களில் ஈடுபடும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள்: கொழும்பு வார ஏடு

[ஞாயிற்றுக்கிழமை, 22 ஏப்ரல் 2007] தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் எண்ணிக்கை தெரியாத பறப்புக்களில் வன்னியில் ஈடுபட்டுள்ளது என்றும், அவர்களின் வானூர்திகளில் ஒன்று மணலாற்றுப் பகுதியில் உள்ள பதவியாவில் அவதானிக்கப்பட்டுள்ளது என்றும் கொழும்பிலிருந்து வெளிவரும் வார ஏடு தெரிவித்துள்ளது. சண்ட ரைம்ஸ் வார ஏட்டின் பாதுகாப்புத்துறை ஆய்வாளரான இக்பால் அத்தாஸ் தனது பத்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த பத்தியிலிருந்து சில முக்கிய பகுதிகள்: வன்னியில் பறப்புக்களில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளின் வானூர்திகள் ஒரு சமயத்தில் வானில் இருந்து தரைக்கு சூடுகளையும் வழங்கி பயிற்சிகளில் ஈடுபட்டதாக சிறிலங்காவின் புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் அதனை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. மேலும் கிழக்கில் அரசாங்கம் கூறுவது போல் படையினரின் முழுக்கட்டுப்பாட்டில் அந்தப்பகுதி இல்லை. சில பகுதிகளில் உள்ள விடுதலைப் புலிகள் மிக அதிகளவான சேதங்களை விளைவித்து வருகின்றனர். பல இடங்களில் தற்போதும் எதிர்ப்புக்கள் உள்ளன. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தான் இது அதிகமாக உள்ளது. களத்தின் உண்மையான நிலவரம் அரசாங்கத்தின் தீவிரமான பிரச்சாரங்களினால் மறைக்கப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் நோக்கம் தெளிவானவை. அவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றைய இடத்திற்கு தமது படைகளை செறிவாக்கி வருகின்றனர். இது அரசாங்கப் படையினரின் பலத்தை பரவலடைய வைப்பதற்கு அவர்களுக்கு போதுமானதாக உள்ளது. வடபோர்முனையை பொறுத்த வரையிலும் இரு தரப்பும் தமது நகர்த்தல்களை செய்து வருகின்றன. புதுவருடத்திற்கு முன்னைய நாட்களில் மடு தேவாலயத்திற்கு வடக்காக நகர்ந்த அரசாங்கப் படையினர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். இந்த தாக்குதலில் இராணுவத்தின் உயர் பயிற்சிகளை பெற்ற அணி ஒன்று சிக்கி பலியாகி உள்ளது. கொல்லப்பட்ட 7 படையினரின் சடலங்களை விடுதலைப் புலிகள் கையளித்துள்ளனர். ஆனால் அரசாங்கம், தனது மிக உயர்ந்த பயிற்சி பெற்ற 8 படையினர் காணாமல் போனதாக கூறியதுடன் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம் என அச்சத்தையும் வெளியிட்டு இருந்தது. மோதல்களில் காயப்படும் தமது உறுப்பினர்களின் தேவைக்காக விடுதலைப் புலிகள் குருதி சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு முன்னரங்குகளுக்கு அண்மையாக பல இடங்களில் உயர் அலைவரிசை கொண்ட தொடர்பு சாதனங்களையும் நிறுவி வருகின்றனர். முல்லைத்தீவு கடற்பகுதிகளிலும், வடக்கு - கிழக்கு கரையோரப் பகுதிகளிலும் குறிப்பாக நாகர்கோவில், வெற்றிலைக்கேணி, கண்டல்காடு, சாலை கடற்பகுதிகளில் விடுதலைப் புலிகள் தமது கடற்புலிகளின் பலத்தை அதிகரித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நின்ற சரக்கு கப்பல் ஒன்றை விடுதலைப் புலிகள் தகர்க்க முயன்றுள்ளனர். இந்த கப்பல் தனியாருக்கு சொந்தமான சீமெந்துக் கூட்டுத்தாபனத்துக்கு அருகில் தரித்து நின்றது. இது அதிகாரிகளிடம் பலத்த அச்சத்தை உண்டு பண்ணியுள்ளது. ஆனால் தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால் அதனால் எத்தகைய விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதை கணிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் விடுதலைப் புலிகளால் கட்டுநாயக்கா வான்படைத்தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல், இராணுவ, பொருளாதார சேதங்களை போன்று இருந்திருக்கும். 2002 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதத்தில் இருந்து ஒக்ரோபர் மாதம் வரையிலும் நிலைமைகளை ஆராய்ந்த அமெரிக்காவின் பசுபி பிராந்திய கட்டளைப்பீடம் சிறிலங்கா அரசாங்கத்தை இரவுப் பார்வை சாதனங்களை வாங்கும் படி பணித்திருந்தது. முதலில் உலங்கு வானூர்திகளுக்கும், பின்னர் சரக்கு வானூதிகளுக்கும், இறுதியாக தாக்குதல் வானூர்திகளுக்கும் அதனை உபயோகிக்கும் படி அது ஆலோசனைகளை வழங்கியிருந்தது. அதற்கான பயிற்சிகளுக்கும் அதிகாரிகள் பரிந்துரை செய்திருந்தனர். விடுதலைப் புலிகள் வசம் உள்ள வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளின் தாக்குதிறன் குறையும் வரையில் இரவு நேர வான் பறப்புக்களையே அதிகளவில் மேற்கொள்ளும் படி வான்படையை கேட்டிருந்தது. விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதல் திறன் தற்போதும் முனைப்பாக உள்ளது, எனவே பகல் நேரத்திலான வானூர்திப் பறப்புக்கள் மிகவும் ஆபத்தானவை. வெற்றிகரமான தாக்குதல்களை நடத்த வேண்டும் என்றால் வான்படையினர் இரவுத் தாக்குதல்களை நடத்த வேண்டும். தற்போது சிறிலங்கா வான்படையினரிடம் உள்ள MI-24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகளில் சில முன்னணிப் பார்வையுள்ள கடந்த ஊதா தொகுதியை (Forward Looking Infrared (FLIR) system) கொண்டுள்ளன. இந்த சாதனம் மிகவும் பெறுமதியானது என தான் எண்ணுவதாக ஒரு MI-24 உலங்கு வானூர்தியின் வானோடி ஒருவர் தெரிவித்துள்ளார். சில வான்படை வானோடிகள் பழைய இரவுப் பார்வைச் சாதனத்துடன் பறப்புக்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் அதற்கான முறையான பயிற்சிகளும் அற்றவர்கள். ஏவுகணைத் தாக்குதல்களுக்கு அப்பால் வானோடிகளுக்கு இரவுத் தாக்குதல் பயிற்சிகள் அதிகளவில் தேவைப்படுகின்றன. ஏனெனில் அப்படியான பயிற்சிகள் இருந்திருந்தால் விடுதலைப் புலிகளால் மார்ச் 26 ஆம் நாள் கட்டுநாயக்க வான்படைத்தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, தாக்குதலுக்கு முன்னர் தடுத்திருக்க முடியும் அல்லது பின்னர் அவர்களுக்கு இழப்புக்களை ஏற்படுத்தியிருக்க முடியும். விடுதலைப் புலிகளின் கட்டுநாயக்க வான்படைத்தளத்தின் மீதான தாக்குதலை அடுத்து வான் பாதுகாப்பிற்கான பல எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை பாதுகாப்புச் செலவை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளன. எனினும் பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக அவற்றை வெளியிட முடியாது. இந்த கொள்வனவுகளில் நடைபெறும் ஊழல்களையும் வெளியிட முடியாது அவை உயர் ரக பாதுகாப்பு இரகசியங்களாக பேணப்படுகின்றன. பேச்சுக்கள் தொடர்பான ஊகங்கள் எழுகின்ற போதிலும், களத்தின் தாயாரிப்பு வேலைகள் ஒரு தெளிவான கருத்தை சொல்கின்றன. அதாவது எதிர்வரும் வாரங்களில் அதிகளவான மோதல்களை எதிர்பார்க்கலாம் என்பது தான் என அந்த பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.