Saturday, March 10, 2007

மட்டக்களப்பில் படையினரின் நகர்வுகள் முறியடிப்பு.

[சனிக்கிழமை, 10 மார்ச் 2007]

மட்டக்களப்பு படுவான்கரைப்பகுதி மீது இதுவரை சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.

கடந்த 3 நாட்களாக படுவான்கரை நோக்கி படையினர் முன்னகர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

செங்கலடி கறுத்தப்பாலம் வழியான படையினரின் முதல் நாள் நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டிருந்தது.

நேற்று வெள்ளிக்கிழமை புல்லுமலையில் இருந்து படையினர் மேற்கொண்ட நகர்வும் உன்னிச்சைப்பகுதி ஊடாக மேற்கொண்ட முன்னகர்வும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன.

இந்நிலையில் மட்டக்களப்பு அம்பாறை எல்லையில் 36 ஆம் கொலனியிலிருந்து தாண்டியடி நோக்கி சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட நகர்வு ஒன்றை இன்று விடுதலைப் புலிகள் முறியடித்தனர்.

இதன்போது நல்லதண்ணியோடை, அடைச்சகல், வாதக்கல்மடு ஆகிய பகுதிகளிற்கு நகர்ந்த படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தினர்.

இத்தாக்குதலினால் இந்த இடங்களில் இருந்து படையினர் விரட்டப்பட்டனர். படையினரை 36 ஆம் கொலனி பழைய நிலைகளுக்கு பின்தளளும் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

அத்துடன் உன்னிச்சைப்பகுதியில் படையினர் மேற்கொண்ட நகர்வு ஒன்றும் விடுதலைப் புலிகளால் தடுக்கப்பட்டு படையினர் பின்தள்ளப்பட்டுள்ளனர்.

ஆயினும் படையினர் தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

புளுக்குனாவை, மகா ஓயாச்சந்தி, வாழைச்சேனை கடதாசி ஆலை, தம்பிட்டி, வெபர் மைதானம் ஆகியவற்றில் இருந்து படையினர் ஆட்டிலெறித்தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இதனை விட சத்துருக்கொண்டான், கல்லடி, ஆரைப்பற்று, விமான நிலையம் ஆகியவற்றில் இருந்து படையினர் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

படுவான்கரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் புதிய புதிய முனைகளை திறந்து முன்னகர்வு முயற்சிகளை சிறிலங்காப் படையினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 2 நாட்களில் செங்கலடி கறுத்தப்பாலம் மற்றும் புல்லுமலைப்பகுதி ஆகியவற்றின் ஊடான சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இன்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அவசர மாநாடு ஒன்றை அலரி மாளிகையில் நடத்தியுள்ளார்.

இந்த மாநாட்டில் படுவான்கரை படை நடவடிக்கை விவகாரமும் வில்பத்து காட்டில் இராணுவ உயரதிகாரிகள் கொல்லப்பட்ட விவகாரமும் முதன்மை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.