Tuesday, November 26, 2013

தமிழ் மக்களின் வலி தெரியாத தமிழன் முத்தையா முரளிதரன்- மனிதனாக கூட இருக்க முடியாது -ஈ.சரவணபவன்

தனது மகனை , மகளை, கணவனை , மனைவியை தொலைத்த உறவுகளின் வலியை விளங்கிக் கொள்ள முடியாத ஒருவர் மனிதர் என்று கருதப்படவே தகுதி இல்லாதவர் என முத்தையா முரளிதரனின் கூற்றுக்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

கடந்த 21 ஆம் திகதி 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அதற்கான விவாத நேரத்தின் போது உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் இலங்கையின் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனைச் சந்தித்திருந்தார்.

அதன்போது முரளிதரன் வெளியிட்ட சில கருத்துகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. அதன்படி தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை மறப்போம் மன்னிப்போம் என அவர் தெரிவித்திருந்தார்.

எனினும் இது அவரின் சொந்த விருப்பம். அதை நான் விளக்க விரும்பவில்லை. ஆனால் இலங்கையில் டேவிட் கமரூன்  பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளார் எனவும் 20 அல்லது 30 பெண்கள் மட்டும் தமது உறவுகள் காணாமற்போய்விட்டனர் என படங்களை வைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தி நிற்கின்றனர்.

எனவே இவற்றினை மட்டும் வைத்துக் கொண்டு இலங்கை நிலைமைகளைக் கணக்கிடக்கூடாது. இவை பிரித்தானிய பிரதமர் கமரூனிற்கு காட்டுவதற்காக அன்றைய தினம் மட்டும் ஏற்பாடாகியும் இருக்கக் கூடும் என்றும் தெரிவித்திருந்தார். இவரது கருத்து தமிழ் மக்கள் மத்தியில் மன உழைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் இவர் ஒரு தமிழனாக இருந்து கொண்டு இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம் .

அது மட்டுமன்றி அவ்வாறு கூறும் உரிமை முரளிதரனுக்கு கிடையாது எனவும் இவருக்கு ஆனித்தரமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

ஒரு தமிழ் பெண் தன் கணவர் உயிரோடு இருக்கின்றாரா இல்லையா என்று தெரியாத நிலையில் வாழ்வது எவ்வளவு அவலமானது என்பதை தமிழரான இவர் விளங்கிக் கொள்ளாமல் இருப்பது வியப்பைத் தருகின்றது.  

அத்துடன் கணவனைக் காணாத பெண்கள் தனது கணவன் உயிருடன் இருக்கின்றாரா  இல்லையா என்று கூட தெரியாது தனது தாலியைக் கழற்றுவதா நெற்றிப் பொட்டை அழிப்பதா என்று கூட புரியாத  நிலை எவ்வளவு கொடுமையானது.

தனது பிள்ளை, கணவர் காணாமாற் போன ஒரு பெண்ணின்; வலியையோ ஒரு தந்தை, காணாமற் போன பிள்ளையின் வலியையோ புரிந்து கொள்ள முடியாத ஒருவர் மனிதர் என்று கருதப்படவே தகுதி இல்லாதவர் என்று நான் கருதுகின்றேன்.

முத்தையா முரளிதரனுக்கு அவர் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் என்ற அடிப்படையிலும் தமிழர் என்ற வகையிலும் நிறைய அபிமானிகள் உண்டு.

ஆனால் அவர் தான் ஒரு தமிழர் என்பதையும் மனிதர் என்பதையும் மறந்து  இலங்கையில் இன ஒடுக்குமுறைகளைத் திருப்திப்படுத்த  வெளியிட்ட அபத்தமான கருத்து அவரைத் தமிழ் மக்களிடம் மட்டுமன்றி மனிதாபிமானிகளிடமும் வெறுப்புக்குரிய ஒருவராக மாற்றி விட்டது.

அது மட்டுமன்றி விளையாட்டுகளில் இனி அவரைக் கணக்கில் எடுக்கப்போவதில்லை. தான் பிறந்த தமிழினத்துக்கு விரோதமாக மட்டுமன்றி மனிகுலத்திற்கும் விரோதமாகச் செயற்பட்டதன் மூலம் தன்னைத் தானே தனிமைப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார் என்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.