Tuesday, September 24, 2013

தேர்தல் விதிமுறைகள் அரச தரப்பினரால் மீறல் - சர்வதேச கண்காணிப்புக்குழு காட்டம்


வட மாகாண சபைத் தேர்தல் காலங்களில் நடைபெற்ற சிறீலங்கா இராணுவத்தினரது நடவடிக்கைகளுக்கு எதிராக தென் ஆசியப்பிராந்தியத்தில் இருந்து வருகை தந்த சர்வதேச தேர்தல் கண்காணிப்புக்குழு தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. தேர்தல் காலங்களில் தேர்தல் விதிமுறைகள் மற்றும் சட்ட ஒழுங்குகள் சிறீலங்கா அரச தரப்பினராலும் அரச படைகளினாலும் அதிக அளவில் மீறப்பட்டதையும் மேற்படி கண்காணிப்புக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. சிறீலங்கா தேர்தல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் இங்கு வருகை தந்திருந்தவெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களே தமது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

தேர்தல் நடைபெற்ற நாளிற்கு முன்னைய நாட்களில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பாகப் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் இராணுவத்தினரால் ஆயுத முனையில் தாக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பல வேட்பாளர்களின் வீடுகள் சிறீலங்கா இராணுவப் புளனாய்வாளர்கள் மற்றும் துணை இராணுவக் குழுக்களைச் சார்ந்தவர்கள் என பொதுமக்களால் சந்தேகிகப்படும் நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் அக்குழு குற்றம்சாட்டியது. மேலும் சிறீலங்காவின் தேசிய இராணுப்பிரிவைச் சேர்ந்த படையினர் மகிந்த ராஜபக்ஸவின் அரசியல் கட்சியின் பிரச்சார நடைவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், தேர்தலில் நேரடியாகவே ஈடுபட்டதாகவும், மகிந்த ராஸபக்ஸவின் கட்சியை சார்ந்தவர்களுக்கு ஆதரவு தேடும் முறையில் அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களை தேர்தலில் வாக்களிக்க வரும் மக்களிடம் அச்சுறுத்தும் வகையில் விநியோகித்ததாகவும் அக் கண்காணிப்புக்குழு தெரிவித்தது.

இக்கண்காணிப்புக்குழுவின் தலைவரான முன்னாள் இந்திய தேர்தல் ஆணையாளர் கோபாலசாமி தமிழ் மக்கள் நெடு நாட்களுக்குப்பின் ஜனநாயக செயல்முறையில் பங்குபற்றுவதில் ஆர்வம் காட்டியதாகவும் எனினும் அதை தடுக்கும் வகையில் பல அசம்பாவிதங்கள் அரங்கேறியதாகவும் தெரிவித்தார். மேலும் நம்பக்தன்மை வாய்ந்த உறுதியான மக்கள் மனங்களை வென்றெடுக்கக்கூடிய தேர்தல் நடைமுறைகளை அமுல்ப்படுத்த தேர்தல் ஆணையாளரிடம் அதிக அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் எனவும் கருத்து வெளியிட்டார். எனினும் வழமையன இந்திய தலைமைகளைப் போல் சிறீலங்கா நடைபெறுவது மகிந்தவின் தனிப்பட்ட ஆட்சியென்பதையும், அரசின் முக்கிய பொறுப்புக்களில் உள்ள அனைவரும் மகிந்த மீதான விசுவாசிகளே என்பதை அறியத்தவறிவிட்டார்.

அடிதடி, துப்பாக்கிச்சூடுகளுக்கு மத்தியில் நடைபெற்ற வட மாகாண சபைத்தேர்தலை மிகவும் நீதியான முறையில் நடைபெற்றது வடமாகாண சபைத்தேர்தல் என முரசறைந்தவர்தான் சிறீலங்காவின் தேர்தல் ஆணையாளர். இவர் கைகளில் எவ்வளவு அதிகாரத்தைக் கொடுத்தாளும் அது புலிப்பசிக்குப் புல்லை கொடுத்தது போன்று பிரயோசனமற்றதாகவே இருக்கும்.தேர்தல் வேட்பாளர் ஒருவர் அவரது வீட்டு வாசலில் வைத்து இராணுவத்தினரால் மிரட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்கச் சென்ற உள்ளுர் தேர்தல் கண்காணிப்பாளர் ஒருவர் மிரட்டப்படமை, அனந்தி சசிதரன் மீதான இராணுவம் மற்றும் துணை இராணுவக்குழுக்களின் அட்டுமீறல் சம்பவம், மேலும் அரச ஆதரவுடன் இடம்பெற்ற போலி 'உதயன்" பத்திரிக்கை விநியோகம் மற்றும் தொலைக்காட்சி ஊடகத்தினரின் தவறான செய்திப் பிரயோகங்கள் என்பவை தேர்தல் சட்டங்களை அடியோடு மீறும் செயல் எனவும் அவர் விபரித்தார்.

தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் சிலவற்றின் வேண்டுகோளுக்கிணங்க உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்ல போக்குவரத்து சேவைகள் அமுல்ப்படுத்தப்பட்டதாகவும் எனினும் 26மூஇடம்பெயர்ந்த மக்களே வாக்களிப்பில் பங்குபற்றியதாகவும் அவர் தெரிவித்தார். இத்தனை திருகுதாளங்களையும் அரங்கேற்றிவிட்டு த.தே.கூ வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டபின் தமது ஆட்சியில் வடக்கில் வாழும் மக்களின் ஜனநாயக நடவடிக்கைகள் மீதான நம்பிக்கைகள் உயர்வடைந்துள்ளதாக சர்வதேசத்திற்கு அறிக்கை விட்டுள்ளார் மகிந்த ராஜபக்ஸ. இதனை ஏற்றுக்கொள்கின்ற அரசியல் தலைமைகளும் சர்வதேசத்தில் இருக்கவே செய்கின்றன. தேர்தல் நடைபெறும் நேரத்தில் தமிழர்களை வீட்டுக்குள்ளேயே முடங்க வைக்கப்பார்த்ததுதான் இவரது தேர்தல் வெற்றி நோக்கிய திட்டமாக இருந்தது. அத்தனை திட்டத்தையும் தவிடுபொடியாக்கி த.தே.கூட்டமைப்பை தமிழர்கள் அமோக வெற்றி பெற வைத்திருக்கின்றார்கள்.

இதற்கான காரணம் தமிழ்த்; தேசியம் மீதான தமிழ் மக்களின் நாட்டமே தவிர த.தே.கூட்டமைப்பின் தலைமைகளின் சுய அரசியல் சிந்தனைக்காகவல்ல. இதனை அறியாது தமது சொந்த எண்ணப்பிரதிபலிப்புக்களை ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணக்கருவெனக் கருதி சிங்கக்கொடி அசைக்கும் நிகழ்வுகள் இனி இடம்பெற்றால் அது தமிழர்களின் அவநம்பிக்கைக்கான விலையாகத்தான் இருக்கும். இந்நிலமை ஒட்டுமொத்த தமிழ்த்தேசியத்தையே உருக்குலைத்துவிடும். தமிழர்களின் எண்ணங்களை முழுமையாக அறிவதுதான் தமிழ் அரசியற் தலைமைகளின் தற்காலத் தேவை.
-ஈழவன்னியன்-

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.