Friday, March 15, 2013

இலங்கை தமிழர் விடயத்தினில் இந்தியா கோட்டைவிடுகின்றது! எச்சரிக்கின்றது இந்திய நாளிதழான த ஹிந்துஸ்தான் டைம்ஸ்!!

கடந்த கால செயற்பாடுகளைக் கொண்டு இந்தியா இலங்கை விடயத்தை முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்று த ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அதன் ஆசிரியர் தலையங்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குழப்பமாகவும், எதிர்வினையானதுமாக இருக்கின்றது. கடந்த காலத்தில் ஜெ.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் போராட்ட குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கியது. இதன்விளைவாகவே 1987ம் ஆண்டு இந்தியா இலங்கை உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.

அதன்பின்னர் விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக இந்தியா அமைதிக்காக்கும் படையினரை அனுப்பி இருந்த போதும், 1200க்கும் மேற்பட்ட இந்திய படையினர் பலியாகினர்.

இவ்வாறான நிலையில் இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த பின்னரும், தமிழர்களுக்கான இறைமை தீர்வு இன்று கிடைக்கப்பெறாமலே உள்ளது.இது தொடர்பிலான இந்தியாவின் செயற்பாடும் மந்தமாக காணப்படுகிறது.கடந்த 2012ம் ஆண்டு ஜெனீவா மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிராக பிரேரணை இந்தியா ஆதரித்திருந்த போதும், அதன் பின்னர் இந்த அறிக்கை தொடர்பில் இலங்கையுடன் இந்தியா எந்த பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை.

தற்போது இந்த வருடம் அமெரிக்கா கொண்டு வந்துள்ள பிரேரணை தொடர்பில் இந்திய சீரான நிலைப்பாடு ஒன்றை வெளிக்காட்டாமல் இருக்கிறது. இந்தியாவின் இந்த நிலைப்பாடு தமிழர்களை மேலும் பின்தள்ளுவதாக அமையும் என்று த ஹிந்துஸ்தான்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து இலங்கையில் தமிழர்களை சம உரிமையுள்ள பிரஜைகளாக மதிக்கப்படவும், அனைத்து நல்லிணக்க பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தவும் வலியுறுத்த வேண்டும் எனவும் அந்த பத்திரிகை கோரியுள்ளது.அத்துடன் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றையும் முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்காக இந்தியா இதையேனும் செய்ய வேண்டும் எனவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிவுறுத்தியுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.