Sunday, October 21, 2012

வரலாற்றுத் தவறிழைத்தது யார்? பிரபாகரனா? சொல்யஹய்மா? - தாயகத்தில் இருந்து வீரமணி.

அமெரிக்காவின் அன்பு முகம் நோர்வே. அமெரிக்காவின் கோர முகம் இஸ்ரேல்’ இது தமிழீழத் தேசியத் தலைவரின் கூற்று. இந்த வசனத்தின் தீர்க்க தரிசனத்தையும் யதார்த்தத்தையும் தமிழ் மக்கள் தற்போது உணர்ந்துகொண்டிருக்கின்றனர். தமிழீழத் தேசியத் தலைவர் எது செய்தாலும், எதைச் சொன்னாலும் அதன் பின்னால் மிகப் பெரும் அர்த்தம் இருக்கும். அந்த அர்த்தத்தை எல்லோராலும் இலகுவில் புரிந்துகொள்ள முடியாது. காலம் சென்ற பின்னரே சிலவற்றைப் புரிந்துகொள்ள முடியும். தலைவர் கூறியது போல அமெரிக்காவின் அன்பு முகத்தை நோர்வேயின் சிறீலங்காவிற்கான சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தற்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை அழிக்கவேண்டுமென்ற ஒரே நோக்கத்துடனேயே நோர்வே தமிழர் தாயகத்திற்கு வந்து அமைதி நாடகமாடியது என்ற உண்மையை தற்போது நோர்வே தூதுவரே அம்பலப்படுத்தியிருக்கிறார். அண்மையில் பி.பி.சி சர்வதேச ஊடகத்திற்கு ஒரு பேட்டி வழங்கிய எரிக் சொல்ஹெய்ம், போரின் இறுதியில் வன்னியில் இடம்பெற்ற மனிதப் பேரவலத்தைத் தடுப்பதற்கு சர்வதேசத்திடம் திட்டமொன்று இருந்ததாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அதற்குச் சம்மதிக்கவில்லையென்றும் தெரிவித் திருக்கிறார். இந்தப் பேட்டியை சொல்ஹெய்ம் வழங்கியதன் முக்கிய காரணம் கடந்த காலங்களை ஞாபகப்படுத்துவதற்காகவோ கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்களை மக்களுக்குத் தெரியப்படுத்து
வதற்காகவோ அல்ல. மாறாக தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழ்கின்ற தமிழ் மக்களை குழப்புவதற்காகவே இந்தப் பேட்டி திட்டமிட்டு தயார்படுத்தப்பட்டிருக்கிறது.

யுத்தம் முடிவுக்கு வந்து மூன்று வருடங்களாகின்றன. இந்தக் காலத்தில் சொல்ஹெய்ம் பல ஊடகங்களுக்கு பேட்டியளித்திருக்கிறார். ஆனால், மேற்படி காரணத்தை அவர் எங்கேயும் சொல்லியதில்லை. தற்போது அவர் ஏன் கூறுகிறார் என்றால் போரின் அழிவுக்கு புலிகள் தான் காரணமென்று கூறவேண்டிய தேவை அமெரிக்காவிற்கு ஏற்பட்டிருக்கிறது. யாரை வைத்து இதனைச் சொன்னால் தமிழ் மக்களிடமும் சர்வதேசத்திடமும் இந்தக் கருத்து எடுபடும் என்றால் எரிக் சொல்ஹெய்ம் தான் அதற்குப் பொருத்தமானவர் என்று கருதிய அமெரிக்கா அவரைக் கொண்டு தற்போது புலிகளை மீண்டுமொரு தடவை குற்றஞ்சாட்டியிருக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் போன்ற ஒரு விடுதலை அமைப்பை உலகில் எந்த நாட்டிலுமே எவரும் கண்டுகொள்ள முடியாது. விடுதலைப் புலிகளைப் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு போராட்ட அமைப்பு இனிமேல் உலகில் வேறெங்கும் தோற்றம் பெறமுடியாது. விடுதலைப் புலிகளுக்கு நிகர் புலிகள் தான். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தனியே ஒரு ஆயுதம் தாங்கிய அமைப்பு அல்ல. ஆயுதம் தாங்கிய அமைப்பாக மட்டும் இருந்திருந்தால் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டவுடன் இந்த உலகிலிருந்தே புலிகள் துடைத்தெறியப்பட்டிருப்பார்கள்.

மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் ஜனநாயக வழியிலான செயற்பாடுகள் இன்றுவரை தாயகத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் நடைபெறுகிறது. விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை, தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவுடனேயே தமிழீழ விடுதலைப் போராட்டம் நடைபெற்றது என்பதற்கு தற்போதைய செயற்பாடுகளே சான்றாக இருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டுமென்று சில நாடுகள் தீர்மானமெடுத்தன என்றும் அவை அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே நடைபெற்றன என்றும் தமிழ் மக்கள் நன்றாகவே அறிந்திருந்தனர். ஆக, அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே வன்னியில் தமிழ் மக்கள் அழித்தொழிகப்பட்டனர் என்ற உண்மையைத் தமிழ் மக்கள் படிப்படியாக உணரத் தொடங்கிய அதேநேரம் நோர்வேயின் சமாதான வேடம் இன அழிப்பு நாடகத்திற்கான ஒரு பாத்திரமேற்றல் என்பதும் தற்போது படிப்படியாக அம்பலமாகிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு முயன்ற முதலாவது சக்தி அமெரிக்கா. ஆனால் தானே நேரடியாக அதனைச் செயற்படுத்தாமல் மறைமுகமாக நின்று நோர்வேயின் அனுசரணையுடன் அதனைச் செயற்படுத்த எண்ணியது. தமிழீழ விடுதலைப் புலிகள் சிறீலங்கா அரச படைகளுக்கு சம பலத்துடன் இருந்தபோது சிறீலங்கா படைகளால் அவர்களை ஆயுத ரீதியாக அழிக்க முடியாது என்பது அமெரிக்காவிற்கும் நோர்வேக்கும் நன்றாகவே தெரிந்தது. அதற்காகவே சமாதானப் பேச்சுவார்த்தை என்ற நாடகம் நோர்வேயால் அரங்கேற்றப்பட்டது. இந்தச் சமாதான காலத்திற்குள் விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு கட்டமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத முகவராக இருந்த கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் என்ற அடிவருடி விலைக்கு வாங்கப்பட்டார்.

தமிழீழ தேசியத் தலைவருக்கு நல்லவர் போன்று நடித்த கே.பி, பணத்தைக் கண்டதும் குணம் மாறினார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அழிவிற்கு அவரும் ஒரு பங்காளியாக மாறினார். பி.பி.சி ஊடகத்திற்கு எரிக் சொல்ஹெய்ம் வழங்கிய பேட்டியில் விடுதலைப் புலிகள் இறுதிவரை போராட எடுத்த முடிவை வரலாற்றுத் தவறு என்று வர்ணித்திருக்கிறார். உண்மையான, நேர்மையான ஒரு இராஜதந்திரியாக அவர் இருந்தால் யார் இழைத்தது வரலாற்றுத் தவறு என்று அவர் தனது மனச்சாட்சியைத் தொட்டுக் கேட்கவேண்டும். இக் கட்டுரையாளராகிய நானும் ஒரு தமிழ் மகன். மானமுள்ள தமிழ் மகன். அன்றிலிருந்து இன்றுவரை தாயகத்திலேயே வாழ்பவன்.

எரிக் சொல்ஹெய்ம் சமாதானத் துர்துவராக தாயகத்திற்கு வந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன். சொல்ஹெய்ம் வருகின்ற ஒவ்வொரு தடவையும் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த மகிழ்ச்சியைச் சொற்களாலோ வார்த்தைகளாலோ வடிக்க முடியாது. தமிழீழ தேசியத் தலைவர் அவர்களும் தமிழ்ச்செல்வன் அவர்களும் கைலாகு கொடுத்து சொல்ஹெய்மை வரவேற்கும் புகைப்படங்களை பார்த்த மக்கள் அடைந்த அளவற்ற சந்தோச அலைகள் இன்றும் என் மனக் கண் முன்னே வருகின்றன. எங்களைக் காக்க வந்த தேவ தூதுவர் என்றே சொல்ஹெய்மை தமிழ் மக்கள் நம்பி நின்றனர்.

ஆனால், இவ்வாறு நம்பி நின்ற மக்கள் இறுதியில் கொத்துக் குண்டுகளால் கொல்லப்பட்டபோதும், எரிகுண்டு
களால் உடல் கருகிய போதும், உணவின்றி பட்டினியால் இறந்த போதும் சிங்கள இராணுவத்தால் குரூரமாகப் பாலி
யல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டபோதும் சொல்ஹெய்ம் என்ற சமாதானத் தூதுவர் வாய் திறக்காமல் அந்த அழிவை பார்த்து இரசித்துக்கொண்டிருந்தார். எல்லாம் முடிந்த பின்னர் இப்போது அவர் புலிகளின் வரலாற்றுத் தவறைப் பற்றிக் கதையளக்கிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மக்கள் மயப்படுத்தப்பட்ட ஒரு போராட்ட அமைப்பு. இதனைத் தலைமையேற்று நடத்தியவர் தான் தலைவர் பிரபாகரன். தமிழ் மக்களின் விடிவிற்காக தாங்கள் வரித்துக்கொண்ட இலட்சியத்திற்காக இறுதிவரை போராட புலிகள் எடுத்த முடிவு தவறு என்று சொல்ஹெய்ம் கூறுவாராயின் தான் செய்ததை சரி என்று நிரூபிக்கிறாரா? தன்னை நம்பி நின்ற மக்களை ஏமாற்றி, மக்கள் இறுதியில் செத்து மடிந்த போது சமாதானத் தூதுவர் என்ற வேடத்துடன் அதனைப் பார்த்துக்கொண்டிருந்த சொல்ஹெய்ம் இழைத்தது வரலாற்றுத்தவறா? தமது மக்களின் விடுதலைக்காக இறுதிவரை போராடுவோம் என்ற இலட்சியத்துடன் போராட்டத்தை முன்னெடுத்த தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் இளைத்தது வரலாற்றுத் தவறா?
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் சர்வதேச பிரதிநிதிகள் முன்பாக புலிகள் அனைவரும் சரணடைய வேண்டும் பின்னர் அவர்கள் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டு தலைவர் பிரபாகரன் மற்றும் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் தவிர ஏனையோர் விடுவிக்கப்படுவார்கள் என்ற திட்டமொன்று சர்வதேசத்திடம் இருந்தது. அதை ஏற்றுக்கொள்ள புலிகள் மறுத்துவிட்டார்கள் என்று சொல்ஹெய்ம் புலிகளைக் குற்றஞ்சாட்டுவது நகைப்புக்கிடமானது.

இவ்வாறான ஒரு திட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் முன்வைக்கப்பட்டதோ என்னவோ எங்களுக்குத் தெரியாது. ஏனெனில் புலிகள் தரப்பில் இது தொடர்பில் கருத்துக்கூறக்கூடிய எவரும் தற்போது இல்லை. இறுதிக்கட்ட உண்மைகளைத் தலைவரின் வாயால் அறிவதற்கு நாம் இன்னும் சில வருடங்கள் பொறுத்திருக்க வேண்டும். ஆகையால் சொல்ஹெய்ம் கூறுவதன்படி நாம் நோக்கினால், புலிகள் ஒரு போராட்ட அமைப்பு. தாங்கள் வரித்துக்கொண்ட இலட்சியத்திற்காக அவர்கள் இறுதிவரை போராட எடுத்த முடிவு எப்படி வரலாற்றுத் தவறாக அமைய முடியும். தமிழ் மக்களின் விடுதலைக்காக ஒரு புலி வீரர் இருக்கும் வரை நாம் போராடுவோம் என்ற இலட்சியத்துடனேயே தலைவரும் போராளிகளும் போராட்டத்தை முன்னெடுத்தனர். யுத்தத்தின் இறுதியில் அவர்கள் சரணடைய மறுத்தமை எப்படி வரலாற்றுத் தவறாக அமைய முடியும்?
மாறாக சொல்ஹெய்ம் செய்ததே மாபெரும் வரலாற்றுத் தவறு. இந்த தூற்றாண்டில் மனித குலத்தால் ஏற்றுக்
கொள்ள முடியாத மாபெரும் வரலாற்றுத் துரோகம். ஏனெனில், யாரையும் நம்பாத தமிழீழ தேசியத் தலைவர் நோர்
வேயின் சமாதான அனுசரணையை ஏற்றுக்கொண்டார். புலிகள் போர்ப் பிரியர்கள். சிறீலங்காவில் நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அவர்கள் விரும்புகிறார்களில்லை. அவர்களே யுத்தத்ததை முன்னெடுத்து அழிவுகளுக்கு காரணமாக இருக்கிறார்கள் என்ற சிறீலங்கா அரசின் பொய்ப் பரப்புரையை முறியடித்து நாங்களும் சமாதானத்தை விரும்புகிறோம் என்பதை வெளிக்காட்டுவதற்காகவே தலைவர் நோர்வேயின் மத்தியஸ்தத்திற்கு இணங்கினார்.

நோர்வே அமெரிக்காவின் கைக்கூலியாக செயற்படுகின்றது என்பதை தலைவர் பிரபாகரன் அவர்கள் நன்றாகவே அறிந்திருந்தார். அதை அவர் வெளிப்படையாகவே கூறியுமிருக்கிறார். ஆனாலும் அவர் நோர்வேயின் மத்தியஸ்தத்தை வரவேற்றார். சமாதான காலத்தில் ஒரு தடவை வன்னிக்குச் சென்ற தமிழீழ உணர்வாளர் தொல்.திருமாவளவன் தமிழீழ தேசியத் தலைவரைச் சந்தித்துக் கலந்துரையாடும் போது நோர்வே தொடர்பில் என்ன நினைக்கிறீர்கள் என்று தலைவரிடம் கேட்டார். நறுக்கென்று பதிலளித்த தலைவர், அமெரிக்காவின் அன்பு முகம் நோர்வே. அமெரிக்காவின் கோர முகம் இஸ்ரேல் என்று கூறியிருந்தார். அது எத்தகைய உண்மை என்பதை நாம் காலம் கடந்துதான் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.
சிங்களப் படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர்களில் படுதோல்வியடைகின்ற சந்தர்ப்
பங்களிலெல்லாம் நவீன ஆயுதங்களை வாரிவழங்கி சிங்களப் படைக்கு பலம் சேர்ப்பது இஸ்ரேல். குறிப்பாக, தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னியிலிருந்து கொடிகாமம், சாவகச்சேரி ஊடாக அரியாலை, செம்மணி வரை முன்னேறியபோது அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க இஸ்ரேலுக்கு ஓடினார்.

அங்கு விசேட பேச்சுவார்த்தைகளை நடத்தியபின் பெருந்தொகையான நவீன பல்குழல் ஆயுதங்களை வாங்கிவந்தார். இந்த ஆயுதங்களால் தென்மராட்சியையே சிங்களப் படைகள் அன்று அழித்திருந்தன. தமிழ் மக்களை அழிப்பதற்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கும் இஸ்ரேலூடாக கோர முகத்துடன் ஆயுதங்களை அள்ளி வழங்கிய அமெரிக்கா, சமாதானப் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் அன்பு முகத்தோடு வந்து தமிழர் போராட்டத்தை அழிப்பதற்கு நோர்வேயை அனுப்பியிருக்கிறது என்ற சாரப்படவே தேசியத் தலைவர் அன்று திருமாவளவனுக்கு அந்தப் பதிலைக் கூறினார்.

சுமாதானம் என்ற போர்வையில் தமிழீழத்துக்குள் நுழைந்த நோர்வேத் தூதுவர் இறுதி யுத்தத்தில் தனது பணியைச் செவ்வனே ஆற்றவில்லை. நம்பி நின்ற தமிழ் மக்களுக்கு எரிக் சொல்ஹெய்மும் நோர்வேயும் செய்தது மாபெரும் வரலாற்றுத் தவறு. நோர்வேயை நம்பி சமாதானப் பேச்சுவார்த்தைக்குச் சென்ற பலமான ஒரு விடுதலை அமைப்பின் கட்டுமானங்கள் கண்முன்னாலேயே சர்வதேச நாடுகளின் அனுசரணையுடன் சிங்களப் படைகளால் துவம்சம் செய்யப்பட்டபோது நோர்வேத் தூதுவர் அதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. நம்பி நின்ற மக்கள் கண்முன்னாலேயே அழிக்கப்பட்ட போதும் சிங்களப் படைகளால் கொன்று குவிக்கப்பட்ட போதும் அதனைத் தடுத்து நிறுத்த அனுசரணையாளர் என்ற போர்வையிலிருந்த நோர்வே நடவடிக்கை எடுக்கவில்லை.

இத்தனை வரலாற்றுத் தவறுகளையும் தங்களிடம் வைத்துக்கொண்டு புலிகளைக் குற்றஞ்சாட்டுவதில் அர்த்தமில்லையென்பதை நோர்வேயும் எரிக் சொல்ஹெய்ம் அவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். மற்றவர்களை நோக்கி உங்கள் கைகளை நீட்டுவதற்கு முன் உங்கள் கைகள் சுத்தமானவையா என்பதை முதலில் பார்க்க வேண்டும். இவ்விடயத்தில் தமிழ் மக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் வல்லரசுகள் வளமான நாடுகள் என்பதற்காக அவர்கள் சொல்கின்ற எல்லாவற்றையும் செவிமடுக்க வேண்டுமென்ற தேவை தமிழ் மக்களுக்கு இல்லை. தமிழ் மக்கள், குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்.

சிங்கள இனவெறியர்களைக் கருவியாகக் கொண்டு தமிழ் மக்களைக் கொன்றழித்ததுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மௌனிக்கச் செய்துள்ள அமெரிக்காவும் இந்தியாவும் இன்று மனிதத்தை நேசிக்கும் ஐரோப்பிய நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டிலிருந்தும் சிறீலங்காவை மீட்டெடுப்பதற்கு துடியாய்த் துடிக்கின்றன. அடுத்துவரும் வாரங்களில் ஐ.நா சபையின் மனித உரிமை மாநாட்டில் சிறீலங்கா மீது கொண்டுவரப்படவுள்ள குற்றச்சாட்டின் தன்மையை வலுவிழக்கச் செய்வதற்காகவே எரிக் சொல்ஹெய்ம் இந்த நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

எனவே, எது நடந்ததோ அதுபற்றி அரட்டையடிப்பதற்கு தற்போது எங்களுக்கு நேரமில்லை. உலகில் நீதி நியாயத்தை நேசிக்கின்ற நாடுகள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக தற்போது தீவிரமாகப் பரிசீலிக்கிறார்கள். எனவே, இதுவரை விடுதலைப் பாதையில் உறுதியாக நின்ற நாங்கள் இனிமேல் சோரம் போகக்கூடாது. எவர் எதையும் சொல்லலாம். தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையும் செயலும் நேரிய பாதையிலேயே சென்றன. தற்போதும் நேரிய பாதையிலேயே செல்கின்றன. எமது தலைவரின் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை வென்றெடுப்போம். அதுவரை நாம் அனைவரும் சோர்ந்துவிடக்கூடாது. நாம் வெல்வோம். எமது இலட்சியம் வெல்லும்.

நன்றி : ஈழமுரசு

1 comment:

  1. எம்மை அண்டி அழித்தவர்கள் கதைகள் கேட்பதற்கு தமிழர் முட்டாள்கள் அல்லர் என்பதனை சொல்ஹேய்ம் விரைவில் புரிந்து கொள்வார். தலைவர் தீர்க்கதரிசி. அவர் கூறியவைகள் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. பொறுத்திருப்போம். நிச்சயம் இந்த வெண்புறா வேசத்தில் வந்த நச்சுப்பாம்புகள் முகத்தில் கரி பூசப்படும்.

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.