Saturday, August 11, 2012

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக டெசோவால் ஏதேனும் நன்மை செய்ய முடியுமா?

டெசோ எனப்படும் ஈழத் தமிழர் ஆதரவு மாநாடு நடத்துவதால் கிடைக்கும் பயன் பூச்சியமே. இந்திய மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கலைஞர் தலைமையிலான திமுக வலுவான அழுத்தம் கொடுத்தால் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.

அதை விடுத்து ஈழத் தமிழர்களின் காயங்களுக்கு மருந்து தடவப் போகிறேன் என்று கூறிக்கொண்டு கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்கு முன்பு கைவிடப்பட்ட டெசோவுக்குப் புத்துயிர் கொடுத்துத் தீர்மானங்கள் நிறைவேற்றுவதால் உருப்படியான பயன் கிட்டப் போவதில்லை.

கருணாநிதி டெசோவை நடத்தித் தீருவேன் என்று கூறுவதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக நோக்கர்கள் கருதுகிறார்கள். ஸ்பெக்ரம் 2 ஊழல் வழக்கில் வசமாக மாட்டியுள்ள மகள் கனிமொழி, பேரன் தயாநிதி மாறன், முன்னாள் அமைச்சர் ராசா ஆகியோரை விடுவிப்பதற்காக கருணாநிதி போடும் நாடகம் தான் இந்த டெசோ என்பதில் தவறில்லை.



தமிழ் நாட்டில் 1980களில் உருவாக்கப்பட்ட தமிழீழ ஆதரவாளர் அமைப்பான டெசோ கருணாநிதி தலைமையில் மீண்டும் புதிப்பிக்கப்படுகிறது. டெசோவின் 21ம் நூற்றாண்டின் முதல் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் 2012 ஏப்ரல் 30ம் நாள் நடைபெற்றது. இதில் எட்டிய தீர்மானத்திற்கு அமைவாக அடுத்த வாரம் முக்கிய மாநாடு நடக்கப் போகிறது. வழமையான கருணாநிதியின் கதை வசனத்தோடு நடக்கவிருக்கும் நாடகத்தை நிட்சயம் ஈழத் தமிழர்கள் ரசிக்க மாட்டார்கள்.

கிழக்கு வங்கத்தில் பிரச்சனை தலை தூக்கிய போது இந்தியா தலையிட்டு வங்க தேசம் உருவாக உதவியது. பாலஸ்தீனம், கிழக்கு திமோர் ஆகிய நாடுகளின் விடுதலைப் போராட்டங்களை இந்தியா ஆதரித்தது. சூடான் இரு நாடுகளாகப் பிரிவதற்கு உலக நாடுகள் முழு ஆதரவு வழங்கின.

தமிழீழம் பிரிவதற்கும் பல காரணங்கள் உண்டு. அதற்கான வழிவகைகளை ஆராய்வதற்கு உலக நாடுகளும் இந்தியாவும் தயாரில்லை. இந்தியாவின் மகளாக ஈழம் இருக்குமென்று மகாத்மா காந்தி ஒரு முறை சொன்னார். அவர் குறிப்பிட்ட ஈழம் முழுத் தீவையும் உள்ளடக்கியது. அவர் தமிழீழம் பற்றிச் சிந்திக்கவில்லை.

காந்தியின் காலத்தில் தமிழீழத்திற்கான குரல் ஒலிக்கவில்லை. தனிநாடாக வேண்டும் என்ற சிந்தனை ஈழத் தமிழர் மனதில் 1980களின் போது தோன்றியது. சிங்களவர்களோடு வாழமுடியாது என்ற நிலையின் காரணத்தாலும் சாத்வீகப் போராட்டத்தின் தோல்வியாலும் ஈழத் தமிழ் கோரிக்கை பலம் பெற்றது.

இங்கிலாந்தில் சட்டம் பயின்று பாரிஸ்டர் பட்டம் பெற்ற அம்பலவாணர் என்பவர் தமிழீழம் தமிழகத்தோடு இணைய வேண்டும் என்ற நோக்குடைய அரசியல் கட்சியை 1980களில் தொடங்கினார். அது கருவில் கருகிய கட்சியாக இடம்பெற்றது. தியாகி சிவகுமாரன் போன்ற துடிப்பான இளைஞர்கள் அம்பலவாணரின் திட்டத்தை வன்மையாக எதிர்த்தார்கள்.

வரலாற்று உணர்வோடு இவற்றைப் பகிர்ந்து கொள்கிறோம். தமிழீழத்தில் இன்னும் போர்முடியவில்லை. விமானத் தாக்குதலும் பீரங்கித் தாக்குதலும் முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால் காணாமற் போதல், காரணமற்ற கைது, ஆட்கடத்தல், பாலியல் வன்முறை என்பன இராணுவ ஆட்சியில் பரவலாக நடக்கின்றன.

ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தலைவர்கள் சிங்கள அரசோடு பேசிக் களைத்து விட்டார்கள். பேச்சு வார்த்தையைக் குழப்பும் கருவியாகப் பேச்சு வார்த்தைகளை பயன்படுத்தும் உத்தியைச் சிங்கள அரசு பயன்படுத்துகிறது. அதாவது முள்ளை முள்ளால் சிங்கள அரசு எடுக்கிறது.

அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டால் மாத்திரமே தமிழீழத்தில் உண்மையான அமைதி ஏற்படும். பிரபாகரன் என்றாலே அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக் கோரிக்கையின் மொத்த வடிவம் தான். பயங்கரவாதம் என்று புனிதமான விடுதலைப் போரை உலக நாடுகள் கொச்சைப் படுத்துகின்றன.

ஆளும் வர்க்கங்கள் தமக்குள் அமைத்துக் கொண்ட கூட்டுச் சூழ்ச்சி தான் தமிழீழ விடுதலைப் போரின் பின்னடைவுக்குக் காரணம். அது தமிழீழக் கோரிக்கையின் குற்றமல்ல. தமிழீழக் கோரிக்கையின். நியாயப்பாடுகள் இன்றும் அழியாதிருக்கின்றன. இதை நிரூபிக்க டெசோ போன்ற மாநாடுகள் அவசியமில்லை.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.