Saturday, August 07, 2010

எங்கள் விடுதலைக்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்: தமிழ் அரசியல் கைதிகள் வேண்டுகோள்!

புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் நேற்று சந்தித்து பேசியுள்ளார். சிறைச்சாலைக்கு நேரில் விஜயம் செய்த அவர் கைதிகளை சந்தித்து அவர்களின் குறைபாடுகளை கேட்டறிந்துள்ளார்.
தமது விடுதலைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் அரசியல் கைதிகள் பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரியுள்ளனர். பொது மன்னிப்பு அளித்து விடுவிக்க முடியாதவிடத்து பிணையிலாவது எம்மை விடுவிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்க வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் நீதி அமைச்சர் அதாவுத செனவிரத்ன, சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக சரணபவன் எம்.பி. கைதிகளிடம் உறுதியளித்துள்ளார். கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் 115 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கொழும்பு வெலிக்கடை பெண்கள் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இவர்களின் பிரச்சினை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கை தொடர்பில் சிறைச்சாலைகள் அமைச்சர் டி.யு. குணசேகரவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக எம்.பி. உறுதியளித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.