Thursday, May 13, 2010

யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 2ம் லெப்டினன் தர படை உயரதிகாரி சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 2ம் லெப்டினன் தர படை உயரதிகாரி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 23 வயதான 2ம் லெப்டினனான கப்புது என அடையாளம் காணப்பட்டுள்ளார். தலைப் பகுதியில் சுமார் 2 துப்பாக்கிச் சூடுகள் காணப்படுகின்றன.

படை முகாமிலிருந்து சுமார் 400 மீற்றர் தூரத்திற்கப்பாலுள்ள புதிய தம்பிரான் ஆலய குளத்திற்கருகாக இவரது சடலம் மீடகப்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் படையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுருடன் பெருமளவு படையினர் நிலை கொள்ள வைக்கப்பட்டுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செட்டியார் மடத்திலிருந்து வண்ணான்குளத்தை நோக்கிச் செல்லும் பகுதியிலேயே இந்த புதிய தம்பிரான் ஆலயம் அமைந்துள்ளது. குறிப்பாக இந்தக் கொலை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட உட்படுகொலையா எனச் சந்தேகங்களும் எழுந்துள்ளன.

நீண்ட காலத்தின் பின்னர் 2ம் லெப்டினன் படை அதிகாரி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் படைத்தரப்பு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. சம்பவ இடத்திற்கு நேரில் சென்றுள்ள மல்லாகம் மாவட்ட நீதிபதி க. அரியநாயகம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.