Friday, May 14, 2010

ஜி - 15 நாடுகளின் தலைமைத்துவம் மஹிந்த ராஜபக்ச வசம்

தெஹ்ரானில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவிருக்கின்ற ஜி15 நாடுகளின் தலைமை பொறுப்பை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈரானிய ஜனாதிபதி மஹ்மூட் அஹமதினியாட்டிமிருந்து பொறுப்பேற்பார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஜி -15 நாடுகள் உலகின் மூன்றிலொரு சனத்தொகையைக் கொண்டுள்ளதுடன் இது உலகின் பெரும் பொருளாதாரங்கள் சிலவற்றை உள்ளடக்கியுள்ளது.

இதில் ஆஜென்ரீனா, பிரேசில், சிலி, எகிப்து, இந்தியா, இந்தோனேஷியா, ஈரானிய இஸ்லாமியக் குடியரசு, யமேக்கா, கென்யா, மலேசியா, மெக்சிக்கோ, நைஜீரியா, செனகல், இலங்கை, வெனிசூலா மற்றும் சிம்பாப்வே ஆகிய 17 வளர்முக நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன.

1989 செப்டெம்பர் மாதம் பெல்கிறேட்டில் 9ஆவது அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டின்போது இக்குழு ஸ்தாபிக்கப்பட்டதுடன் வளர்முக நாடுகளிடையே வலுவானதும் பரஸ்பர நன்மை பயக்கக் கூடியதுமான மேம்பாட்டிற்கான குறிக்கோளைக் கொண்டுள்ளது.

தெஹ்ரானில் நடைபெறவுள்ள ஜீ15 நாடுகளது மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வதற்காக இந்த வார இறுதியில் ஈரானுக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரிஸ், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.