நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் 2002 ஆம் ஆண்டு டிசம்பரில் இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் ஏற்றுக்கொண்டு வெளியிட்ட ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையில் அரசியல் தீர்வுதிட்டம் ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாரித்துள்ளது என அக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையிலுள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்ட கருத்தை தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் தலைமையில் நடந்த கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையில் அரசியல் தீர்வுதிட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாரித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் கூட்டமைப்பின் உறுப்பினர்களால் இத்திட்டம் குறித்து ஆராய்ந்து தீர்மானத்தை எடுக்கலாம். புதிய எம்பிக்களே இறுதி முடிவை எடுப்பர்.
உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் சரித்திர ரீதியாக தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வந்துள்ள தாயகத்தில் ஒருமித்த நாட்டுக்குள் சமஸ்டி அடிப்படையில் ஆட்சிமுறை அமையவேண்டும் என ஒஸ்லோ பிரகடனம் கூறுகிறது.
ஒஸ்லோ பிரகடனம் அடிப்படையில் அரசியல் தீர்வுதிட்டம் தயாரிக்கப்பட்டபோது அதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருநாடுகள் ஒரு தேசம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல் தீர்வுதிட்டம் அமையவேண்டும் என கூறினார். இந்தக்கட்டத்தில்தான் கூட்டமைப்புக்குள் முரண்பாடு ஏற்பட்டது.
வட்டுக்கோட்டை பிரகடனம், திம்பு பிரகடனம், மங்கள முனசிங்க அறிக்கை, இலங்கை இந்திய உடன்படிக்கை மற்றும் சந்திரிகா முன்வைத்த தீர்வுத் திட்டம் ஆகியன இருதரப்புகளாலும் ஏற்றுக்கொள்ளபடாதவை. ஒருபக்கச்சார்பானவை.
ஆனால் டிசம்பர் 2002 ல் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் வெளியிடப்பட்ட பிரகடனம் இலங்கை அரசாலும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். அதன் அடிப்படையிலேதான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்வுத்திட்டம் தயாரித்து வைத்திருக்கின்றது. என்று தெரிவித்தார்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.