Monday, February 08, 2010

ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ காவல்துறையினரினால் கைது

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா சற்று நேரத்திற்கு முன்னர் இராணுவ காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றத்திற்காகவே ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜகீய மாவத்தையில் அமைந்துள்ள காரியாலயத்தில் வைத்து பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் அவரது ஊடகப் பேச்சாளர் சேனக சில்வாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சரத்பொன்சேகாவை பிடரியில் பிடித்து மிகக்கேவலமான முறையில் இழுத்துச் சென்றதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தானும் ஏனையோரும் பார்த்திருக்க மிக மோசமான முறையில் இந்த கைது இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என அவர் திங்கட்கிழமை பகல் கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்த நிலையில் அன்று இரவே இந்த கைது இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரத்பொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது, உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் - ரணில் விக்ரமசிங்க

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரான ஜெனரல் சரத்பொன்சேகாவை கைது செய்துள்ளது சட்டவிரோதமானது, ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கருத்து வெளியிட்டுள்ளார் இலங்கையின் எதிர்கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்க

அவரது கைது இராணுவச் சட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல நாட்டின் பொதுவான சட்டங்களுக்கும் எதிரானது என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க பிபிசி சந்தேஷ்யவிடம் தெரிவித்தார். அவரது கைது என்பது நாட்டின் அரசியல் சாசனத்தை மீறும் செயல் என்றும் அவர் கூறுகிறார்.

அவர் கைது செய்யப்பட்டுள்ளதை தாங்கள் கண்டிப்பதாகவும் அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். இதுகுறித்து பல்தரப்பினருடனும் தான் பேசி வருவதாகவும்,அனைவரும் இதே கருத்தை கொண்டுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

இது சில இராணுவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஜனநாயக விரோதச் செயல் என்றும் அவர் கூறுகிறார். அவர் மீது ஏதாவது குற்றசாட்டுகள் இருந்தால் அவை வழக்கமான நீதிமன்றங்கள் முன்னர் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் ரணில் கருத்து வெளியிடுகிறார்.

அடிப்படை உரிமைகளை மீறும் செயல்

இராணுவச் சட்டங்களின் கீழ் இந்தச் செயல் மேற்கொள்ளப்படுகிறது என்பது சட்ட விரோதமானது என்று கூறும் ரணில் அவர்கள் நடு இரவில் ஒருவரை கைது செய்துவது என்பது அடிப்படை உரிமைகளை மீறும் ஒரு செயல் எனவும் கூறுகிறார்.

ஜெனரல் சரத்பொன்சேகாவின் கைது நாட்டில் மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும், உலகம் முழுவதிலிருந்தும் இதற்கு கண்டன்ம் எழுப்பப்படும் என்றும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது முறையற்றது எனவும் ரணில் விக்ரமசிங்க பிபிசியிடம் தெரிவித்தார்.

போர் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை வருமானால் சாட்சியம் அளிக்க தயார் என சரத்பொன்சேகா தெரிவித்தது கூட அவரது கைதுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

2 comments:

  1. வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

    ReplyDelete
  2. வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.