Saturday, February 13, 2010

சரத் நிரபராதி என நிரூபிக்கப்பட்டால் விடுவிக்கப்படுவார்- ரணிலுக்கு மஹிந்த பதில்

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ராணுவ தளபதியான சரத் பொன்சேகாவை விடுவிப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்திருந்தார்.

நேற்றையதினம் ஜனாதிபதி மாளிகையில் இச்சந்திப்பு இடம்பெற்றது. சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளதால் நாட்டில் குழப்பமும் பதற்றமுமான நிலை காணப்படுவதாக ரணில் மஹிந்தவிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு சரத் பொன்சேகா மீதான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் என்றும் அவரைப் பற்றிய கவலை தேவையில்லாதது என்றும் கூறியுள்ளார் மஹிந்த ராஜபக்ஷ. சரத் பொன்சேகா உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் அவரது மனைவி, வக்கீல்கள் மற்றும் பிறரும் சரத்தைச் சென்று சந்திப்பதற்கும் தடையில்லை எனத் தெரிவித்துள்ளார் மஹிந்த.

சரத்தின் மனைவி அனோமா தவிர வேறு யாரேனும் அவருக்கு உணவு எடுத்துச் செல்ல அனுமதி உள்ளதா என ரணில் கேட்டதற்கு அதை ரரணுவம்தான் தீர்மானிக்க வேண்டும் என மஹிந்த அதை ஒரு நகைச்சுவையாக எடுத்து சிரித்து மழுப்பி விட்டார். அனோமா தான் சரத்துக்கு உணவு எடுத்துச்செல்ல சிறந்த நபர் என்றும் மஹிந்த தெரிவித்தாராம். அத்துடன் இந்தக் கைது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், அது குறித்த தீர்ப்பு வெளியானதும் அதனடிப்படையில் செயற்பட முடியுமெனவும் மஹிந்த ரணிலிடம் எடுத்துக் கூறியுள்ளார்.

இதேவேளை, சரத்பொன்சேகாவை சந்தித்து பேசுவதற்கு விசேட அனுமதியைப் பெற்றுத்தருமாறு ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். இக்கோரிக்கை தொடர்பில் தாம் கூடிய கவனமெடுத்து பரிசீலித்து பதிலளிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். ரணில்-மஹிந்த சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் நீடித்தது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.