Monday, December 21, 2009

தமிழர் தாயகக் கோட்பாட்டை மஹிந்த ஏற்றுக்கொள்கிறாரா? : விளக்கம் அளிக்க கோருகிறது ஜே.வி.பி.

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதற்காக ஈ.பி.டி. பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்துள்ள 10 நிபந்தனைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுவிட்டார் எனில், அந்தக் கோரிக்கைகளில் ஒன்றான தமிழர் தாயகக் கோட்பாட்டை ஜனாதிபதி ஏற்றுக்கொள்கிறாரா? என ஜே.வி.பி. கேள்வி எழுப்பியுள்ளது
ஜே.வி.பியால் நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவே இக்கேள்வியை முன்வைத்தார்.

அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:

ஜெனரல் சரத் பொன்சேகாவைப் பார்த்து அரசு நன்றாகப் பயந்துபோயுள்ளது. பொன்சேகா அமெரிக்கப் பிரஜை என்றும் அவரால் இங்கு வாக்குக் கேட்க முடியாதென்றும் அரசு கூறுகின்றது. அப்படியாயின், அமெரிக்கப் பிரஜை ஒருவருக்கு எப்படி அரசு இராணுவத் தளபதிப் பதவியை வழங்கியது. கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எந்த அடிப்படையில் பாதுகாப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது?

"சண்டே லீடர்" பத்திரிகையில் வந்து சர்ச்சையை ஏற்படுத்திய பொன்சேகாவின் கூற்று தொடர்பில் பொன்சேகாவே விளக்கம் கொடுத்து அதைச் சரிசெய்துள்ளார். ஆனால், அதைப்பிடித்துக்கொண்டு அரசு பொன்சேகாவை மீண்டும் மீண்டும் தாக்குகின்றது. சரத் பொன்சேகா நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டார் என்று அரசு சொல்கிறது.

இந்த நாட்டைக் காட்டிக்கொடுத்தது உண்மையில் மஹிந்தவின் அரசுதான். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசனைப்படியே பொன்சேகாவினதும், இராணுத்தில் உள்ள சில முக்கிய அதிகாரிகளினதும் பதவிகள் மாற்றப்பட்டன என்று அரசு பாகிஸ்தான் "நேசன்" பத்திரிகைக்குத் தெரிவித்திருந்தது.

இது தொடர்பில் அரசு இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்குவதற்காக ஈ.பி.டி.பி. கட்சி பத்து நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. அவற்றை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் என்ற ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அந்த 10 நிபந்தனைகளுள் ஒன்று தமிழர் தாயகக் கோட்பாடு, அடுத்தது மாகாண சபை ஊடான சுயாட்சி. அப்படியாயின் மஹிந்த ராஜபக்ஷ தமிழர் தாயகக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்கிறாரா? இதற்கு ஜனாதிபதி விளக்கமளிக்கவேண்டும். என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.