Thursday, November 05, 2009

பனாகொட இராணுவ முகாமில்: சிறிலங்கா புலனாய்வுத்துறையின் கடும் சித்திரவதையை அனுபவிக்கும் கே.பி.

விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலராக கடமையாற்றிக்கொண்டிருந்தபோது சிறிலங்கா - மலேசிய அரசுகளின் கூட்டுச்சதியால் மலேசியாவில் வைத்து கடத்தப்பட்ட கே.பத்மநாதன் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று புலனாய்வுத்துறை தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

பனாகொட இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கே.பி. இராணுவ புலனாய்வுப்பிரிவினரால் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகிறார். இவ்வாறு அவர் விசாரிக்கப்படுகையில் கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுவருவதாகவும் இந்த சித்திரவதைகளை தாங்க முடியாமல் அவர், பல தடவைகள் மயக்கமற்ற வீழ்ந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இராணுவ புலனாய்வு பிரிவினர் கேட்ட பல தகவல்களை வெளியிட கே.பி. மறுத்ததை அடுத்து, அவர் கடுமையாக தாக்கப்பட்டார் என்றும் காதுகள் நெரிக்கப்பட்டும், கைவிரல்கள் மடக்கப்பட்டும், தோள்பட்டையை அசாதரண நிலையில் மடக்கியும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார் என்றும் இதன்போது அவர் பல தடவைகள் மூர்ச்சையுற்று வீழ்ந்ததாகவும் இராணுவ மருத்துவர்கள் அவரை மயக்கநிலையிலிருந்து எழுப்பினார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல தடவைகள் அவர் மூச்செடுக்கமுடியாமல் மயக்கமுற்றார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கே.பியை சந்தித்த பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சே, சந்திப்பு இடம்பெற்று முடிந்து போகும் முன்னர் பயன்படுத்த தகாத - கெட்ட வார்த்தைகளால் - சிங்களத்தில் கே.பியை திட்டிவிட்டுச்சசென்றார் என்றும் புலனாய்வுத்துறை தகவல்கள் மேலும் தெரிவித்திருக்கின்றன.

கே.பி.மீதான இந்த சித்திரவதை விடயம் வெளியில் தெரிந்துவிடும் என்ற காரணத்தினால்தான் அவரை விசாரணை செய்வதற்கு இந்திய புலனாய்வுத்துறையினர் பல தடவைகள் சிறிலங்கா அரசிடம் உத்தியோகபூர்வமற்ற முறையில் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் அதனை சிறிலங்கா அரசு நிராகரித்துவிட்டதாகவும் தெரியவருகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.