Tuesday, October 27, 2009

உலகத் தமிழ் மாநாட்டில் சிவத்தம்பி கலந்து கொள்வார்: கருணாநிதி - பங்கேற்பது குறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை: சிவத்தம்பி

[செவ்வாய்க்கிழமை, 27 ஒக்ரோபர் 2009]

அடுத்த ஆண்டு கோவையில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பேராசிரியர் சிவத்தம்பி கலந்துகொள்வார் என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி அறிவித்திருக்கிறார். மாநாட்டில் பங்கேற்பதா இல்லையா என்பதை தாம் இன்னமும் இறுதியாக முடிவெடுக்கவில்லை என்று இலங்கை தமிழறிஞர் கா.சிவத்தம்பி அவர்கள் நேற்று பி.பி.ஸி.க்கு தெரிவித்தார்.

தற்போதுள்ள தமிழ் அரசியல் சூழ்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்பது பொருத்தமற்றது என சிவத்தம்பி பி.பி.ஸி. க்கு சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

ஆனால் இது குறித்து திங்கட்கிழமை கருத்து வெளியிட்ட தமிழக முதல்வர் மு கருணாநிதி, கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் அடுத்த ஆண்டு கோவையில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வார் என்று அறிவித்திருக்கிறார்.

ஆய்வரங்க பணிக்காக முன்னதாகவே வருவதாக சிவத்தம்பி தெரிவித்திருப்பதாகவும், மேலும் விவாதப்பொருட்களாக எடுத்துக்கொள்ள ஐந்து விடயங்களை குறிப்பிட்டிருக்கிறார் என்றும் திங்கட்கிழமை சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கருணாநிதி கூறியிருக்கிறார்.

மேலும் சிவத்தம்பி அவர்களின் ஆலோசனையின்பேரில்தான் ஜனவரியில் நடக்கவிருந்த மாநாடு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் பின்னணியில் கருணாநிதியின் இன்றைய அறிவிப்பு குறித்து பிபிஸி தமிழோசையிடம் கருத்து தெரிவித்த சிவத்தம்பி அவர்கள், மாநாட்டில் பங்கேற்பதா இல்லையா என்பது தொடர்பில் தாம் இன்னமும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.