Monday, May 19, 2008

அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டு அரசுடன் இணைந்து செயற்பட தயார்: ஹிஸ்புல்லா கரணம்

[திங்கட்கிழமை, 19 மே 2008,] கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி தரப்படாது விட்டால் மாகாண சபையில் தனித்து இயங்கப் போவதாக மகிந்த ராஜபக்ச அரசை மிரட்டிக்கொண்டிருந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, தனது கோரிக்கையை கைவிட்டு விட்டு அரசுடன் இணைந்து இயங்கத்தயாராகியுள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது. அலரி மாளிகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் நடைபெற்ற சந்திப்பை அடுத்தே கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டு, மாகாண சபையில் அரசுடன் இணைந்து செயற்பட ஹிஸ்புல்லா இணங்கியிருப்பதாக அவை மேலும் தெரிவித்தன. அலரி மாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஆளும் கட்சியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேம ஜயந்த, அலவி மௌலானா, டலஸ் அழகப்பெருமா, ரிசாட் பதியுதீன் ஆகியோரும் கலந்துகொண்டனர். மகிந்த ராஜபக்சவின் உத்தரவுக்கிணங்க சுகாதார அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த ஹிஸ்புல்லா, தனது போராட்டத்தில் தனக்கு ஆதரவளித்த மற்றைய இரு முஸ்லிம் உறுப்பினர்களுடனும் கலந்தாலோசித்து விட்டு, அதிகாரபூர்வமாக தனது முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளார். இதன்படி, மாகாண சபை உறுப்பினராக எதிர்வரும் புதன்கிழமை ஹிஸ்புல்லா சத்தியப்பிரமாணம் செய்வார் என்றும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, கடந்த சனிக்கிழமை பசில் ராஜபக்சவுடனும் தொலைபேசியில் பிள்ளையானுடனும் ஹிஸ்புல்லா நீண்டநேரம் கிழக்கு விவகாரம் பற்றி பேசினார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.