Thursday, May 01, 2008

தமிழகத் தலைவர்களை கடத்தி புலிகள் மீது பழிபோட கருணா குழு தமிழகத்தில் ஊடுருவல்: இந்திய அரசு "திடீர்" எச்சரிக்கை

[வியாழக்கிழமை, 01 மே 2008,]

தமிழகத் தலைவர்களை கடத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பழிபோடுவதற்காக சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப்படைக் குழுவான கருணா குழு தமிழ்நாட்டில் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக இந்திய அரசு திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் "தினத்தந்தி" நாளேட்டில் இன்று வியாழக்கிழமை (01.05.08) வெளியாகியுள்ள செய்தி:

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் கருணா பிரிவினர் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுப்பிரிவு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் உசார்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள இராணுவத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. விடுதலைப் புலிகள், இலங்கை இராணுவ முகாம்கள் மீது வான் தாக்குதல் நடத்தி கலங்கடித்து வருகிறார்கள். இந்தப் போரில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான பேர்கள் மடிகிறார்கள். பொதுவாக இலங்கையில் போர் பெரிய அளவில் நடக்கும் போது, தமிழகத்துக்கு இலங்கையிலிருந்து அகதிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.

அகதிகள் அதிக அளவில் வரும்போது, அவர்களோடு சேர்ந்து விடுதலைப் புலிகளும் ஊடுருவ வாய்ப்புக்கள் உண்டு. இதனால் தற்போது தமிழக கடலோர மாவட்டங்களில் காவல்துறையினர் உசார்படுத்தப்பட்டுள்ளனர். கடலிலும் கடலோரப் பாதுகாப்பு படையினர் தீவிர சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திற்குள் வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் பலத்த சோதனைக்குப்பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் மத்திய உளவுப்பிரிவு காவல்துறையினர் ஒரு அதிர்ச்சியான எச்சரிக்கை தகவலை தமிழக காவல்துறையினருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்தத் தகவலில், இலங்கையிலிருந்து விடுதலைப் புலிகளின் கருணா பிரிவினர், தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வாறு ஊடுருவும் கருணா பிரிவு புலிகள், தமிழகத்தில் வசிக்கும் முக்கிய தலைவர்களை கடத்திச் சென்று மிரட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. விடுதலைப் புலிகள் மீது இந்தப் பழியைப் போட்டு, அவர்களுக்கு கெட்ட பெயரை உண்டாக்கி, போரில் அவர்களின் கவனத்தை திசை திருப்ப, இந்த சதிச் செயலை அரங்கேற்றலாம், என்று எச்சரிக்கைத் தகவலில் கூறப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை தகவலையொட்டி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் காவல்துறையினர் உசார்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக இரவு சுற்றுக்காவல் பணியில் காவல்துறையினர் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும், வாகன சோதனை தீவிரமாக இருக்க வேண்டும், விடுதிகளில் சோதனை கடுமையாக இருக்க வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.