Wednesday, November 14, 2007

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் இரங்கல் நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்

[புதன்கிழமை, 14 நவம்பர் 2007]

தமிழீழ அமைதிப் பேச்சுக் குழுத் தலைவர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலைக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வுகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் சென்னையில் திருமாவளவன் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஒரு சில அரசியல் கட்சிகள், ஒரு சில தலைவர்கள் மறைந்த சு.ப.தமிழ்ச்செல்வனுக்கு அஞ்சலி செலுத்துவதே கூடாது என்றும், அவ்வாறு அஞ்சலி செலுத்துவோரை கைது செய்ய வேண்டும் என்றும், அஞ்சலி செலுத்தும் அரசியல் கட்சிகளை தடைசெய்ய வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.

அதனடிப்படையில் கடந்த 11 ஆம் நாள் வேலூரில் நடைபெறுவதாக இருந்த வேலூர் தமிழ்ச் சங்கத்தின் இரங்கல் கூட்டமும், சென்னையில் நடைபெறவிருந்த பேரணியும் தடை செய்யப்பட்டதுடன், மதுரையில் விடுதலைச் சிறுத்தைகளின் இரங்கல் கூட்டமும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் தமிழ் மக்களின் மனிதநேய உணர்வுகளை நசுக்குவதாக அமைந்துள்ளது.

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதை போல தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு இயல்பாகவே அமைந்துள்ள தமிழ் இனமான உணர்வும் மனிதநேய உணர்வும் இரங்கல் கவிதையாக வெளிப்பட்டதை உலகு அறியும். அத்தகைய மாந்தநேய உணர்வுள்ள முதலமைச்சர் கருணாநிதி, இரங்கல் ஊர்வலம் நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பழ.நெடுமாறன், வைகோ, பசீர் அகமது உள்ளிட்ட அனைவரையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

மேலும் அமைதியான முறையில் நடைபெறும் இரங்கல் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியை கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் தடையை மீறி ஊர்வலம் சென்றதால் கைது செய்யப்பட்டு சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் வைகோ மற்றும் நெடுமாறனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினார். இச்சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் கிருட்டிணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசியல் கட்சிகள் இலங்கை தமிழர் பிரச்சினையையும், விடுதலைப்புலிகள் பிரச்சினையையும் பிரித்து பார்க்கவேண்டும்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வன் மறைவிற்கு மனிதநேய அடிப்படையில் அஞ்சலி செலுத்துவது குற்றம் அல்ல. எனவே கைது செய்யப்பட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவையும், தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறனையும் உடனே விடுதலை செய்யவேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.