Monday, November 19, 2007

வரவு-செலவுத் திட்ட வக்கெடுப்பில் வெற்றி பெறுவோம்: இரு தரப்பும் நம்பிக்கை.!!

[திங்கட்கிழமை, 19 நவம்பர் 2007] நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சித்தாவல் நாடகங்கள், பேரம் பேசல்கள் என்பவற்றிற்கு அப்பால் அரசும், எதிர்க்கட்சியும் தமக்கு சாதகமாகவே வரவு-செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பின் முடிவுகள் இருக்கும் என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளன. இன்று மாலை 5:00 மணியளவில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். நாம் வாக்கெடுப்பில் வெற்றிபெறுவோம் என்று அரச தலைவரின் ஆலேசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் எதிர்பார்க்காத சந்தர்ப்பத்தில் அரசு இன்றைய வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் அது விடுதலைப் புலிகளுக்கு உடனடியான நன்மையாக அமைந்துவிடும். வண. உடுவே தம்மலோக்க தேரர் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு சம்மதித்துள்ளார். எனவே 118 வாக்குகளை பெற்றுவிடலாம் என்று அரசு உறுதியாக நம்புகின்றது. ஜே.வி.பியின் வாக்குகளுடன் சேர்த்து ஐக்கிய தேசியக் கட்சியிடம் 106 வாக்குகளே உள்ளன. அரசிடம் 12 வாக்குகள் அதிகமாக உள்ளன என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனிடையே அரசினால் முன்மொழியப்பட்டதை போல தமது கட்சி புதிய அரசை அமைப்பதற்கு சம்மதிக்கப் போவதில்லை எனவும், தாம் வரவு-செலவுத் திட்டத்தை தோற்கடிப்போம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் என்ன கூறப்பட்டாலும், என்ன செய்யப்பட்டாலும் மகிந்த ராஜபக்ச நிறைவேற்று அரச தலைவர் பதவியில் நீடிப்பார், அவரே நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பார், நாம் இன்றைய வாக்கெடுப்பில் வெற்றிபெறுவோம் என்று நாடாளுமன்ற தலைவரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வாவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.