Friday, November 30, 2007

4 நாட்களில் 49 பேர் பலி- பொதுமக்கள் பலியாவது அதிகரித்துள்ளது: கண்காணிப்புக் குழு எச்சரிக்கை.!!

[வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2007]


இலங்கையில் அதிகரித்து வரும் பொதுமக்கள் இழப்பு குறித்து இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் நவம்பர் 25 ஆம் நாள் முதல் 28 ஆம் நாள் வரையிலான 4 நாட்களில் 49 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 60 பேர் படுகாயமடைந்துள்ளனர். பொதுமக்களின் இழப்புக்கள் அதிகரித்து வருவது குறித்து இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு ஆழ்ந்த கவலை கொள்கிறது.

கிளிநொச்சிக்கு கிழக்கே 20 கிலோ மீற்றர் தொலைவில் நவம்பர் 25 ஆம் நாள் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

அதற்கு மறுநாள் அனுராதபுரத்தில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

நவம்பர் 27ஆம் நாள், கிளிநொச்சியிலிருந்து தென்மேற்கில் கிளைமோர் தாக்குதலில் 7 பாடசாலைச் சிறார்கள் உட்பட 11 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

அதே நாளில் கிளிநொச்சியில் வானொலி நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 2 சிறார்கள் உட்பட 17 பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.

நவம்பர் 28 ஆம் நாள் கொழும்பில் சிறிலங்கா சமூக சேவைகள் அமைச்சுக்கு வெளியே நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் ஒரு பொதுமகன் கொல்லப்பட்டார். இருவர் படுகாயமடைந்தனர். அதே நாளில் கொழும்பு நுகேகொடவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 19 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 36 பேர் படுகாயமடைந்தனர்.

2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முந்தைய நிலைமையை பிரதிபதிலிப்பதாக தற்போதைய நிலைமை உள்ளதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு எச்சரிக்கிறது. அமைதி வழித் தீர்வு காண இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தொடர்ந்தும் உதவி வழங்குவதில் உறுதியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. இது என்ன புது கதை கொழும்பில் படுத்து உறங்குவதுதானே இவர்களது வேலை, கொழும்பில் நடந்த குண்டு வெடிப்புடன் தூக்கம் கலைந்து விட்டதா?

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.