Thursday, May 31, 2007

போர்நிறுத்த உடன்பாட்டை அரசு ஓரிரு வாரங்களுக்குள் தூக்கி வீசும்: கேகலிய ரம்புக்வெல.!!

[வியாழக்கிழமை, 31 மே 2007]


தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டை அரசு சில வாரங்களுக்குள் தூக்கி வீசிவிடும் என சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது.

அனைத்துலக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இன்று வியாழக்கிழமை கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளதாவது:

நோர்வேயின் அனுசரணையுடன் கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்பாடு கடந்த ஆண்டு களத்தில் முறிவடைந்த பின்னர் தற்போது காகிதத்தில் மட்டுமே உள்ளது. விடுதலைப் புலிகள் படையினரை தாக்கி வருவதனால் அது நீண்டகாலம் நீடிக்கப்போவதில்லை.

போர்நிறுத்த உடன்பாட்டை அரசு கைவிட எண்ணியுள்ளது. ஏனெனில் களத்தின் நிலவரம் போர்நிறுத்த உடன்பாட்டுடன் சமாந்தரமாக செல்ல முடியாது உள்ளது. எனவே அது தவறானது. அதனை திருத்துவதற்கு அல்லது கைவிடுவதற்கு இதுவே சரியான சந்தர்ப்பம்.

இதனை கவனத்தில் எடுக்குமாறு நாம் நோர்வேயைக் கேட்டுள்ளோம், அவர்கள் கவனம் எடுக்காது விட்டால், போர் நிறுத்தத்தை மாற்றி அமைக்கும் பொறுப்பை அரசு எடுக்கும் அல்லது அதற்கான நிலைமைகளை சந்திக்கும்.

விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை முறித்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள். ஏனெனில், அதில் இருந்து அரசு விலகிவிட்டால், அரசே போர் நிறுத்தத்தை முறித்து விட்டதாக பிரச்சாரங்களை மேற்கொள்வது அவர்களுக்கு சாதகமானது என்றார் கேகலிய ரம்புக்வெல.

எனினும், போர் நிறுத்த உடன்பாட்டை மாற்றி அமைப்பது தொடர்பாக தமது தூதரகத்துடன் உத்தியோகபூர்வமாக தொடர்புகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது.

போர்நிறுத்தத்தை மாற்றி அமைப்பதற்கு விடுதலைப் புலிகள் தொடர்ந்து தமது மறுப்பை தெரிவித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசின் இந்த வியூகம் மிகவும் ஆபத்தானது, அது மோசமான வன்முறைகளை எதிர்காலத்தில் தோற்றுவிக்கும் என மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தை சேர்ந்த றொகான் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.