Saturday, March 03, 2007

திருமலையில் கைக்குண்டுத் தாக்குதல்: 2 இராணுவத்தினர் பலி.

[சனிக்கிழமை, 3 மார்ச் 2007] திருகோணமலை மொறவேவா பிரிவில் உள்ள நமல்வத்த பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணியளவில் திருகோணமலை நகரத்தில் இருந்து 24 கி.மீ தொலைவில் உள்ள திருமலை - அனுராதபுரம் பிரதான வீதியில் இத்தாக்குதல் இடம்பெற்றது. காயமடைந்த இராணுவத்தினர் மொறவேவா அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளதாக மொறவேவா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே சிலாபம் காவல்துறை பிரிவில் உள்ள முந்தல் பகுதியில் காவல்துறை சோதனைச்சாவடி மீது நடத்தப்பட்ட மற்றுமொரு கைக்குண்டுத் தாக்குதலில் 2 காவல்துறையினர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு 10.30 மணியளவில் உந்துருளியில் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிவிட்டதாக சிலாபம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.