Wednesday, January 24, 2007

தேசிய அரசாங்கம் அமைக்க ஜனாதிபதியுடன் பேசுவதற்காக ...

தேசிய அரசாங்கம் அமைக்க ஜனாதிபதியுடன் பேசுவதற்காக குழுவை நியமித்தார் ரணில் - ஆளும் தரப்புக்கு தாவுவோரை தடுத்து நிறுத்த வியூகம் [Wednesday January 24 2007 ] கரு ஜயசூரிய தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அதிருப்திக் குழு அரசுடன் இணைவதை தடுப்பதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் காணாத நிலையில், அரசுடன் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார். கட்சித் தலைவருக்கிருக்கும் அதிகாரத்தின்கீழ் தேசிய அரசு அமைக்கும் முயற்சிகளை முன்னெடுப்பதற்காக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தலைமையில் நால்வர் கொண்ட குழுவை ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். இக்குழுவில் கட்சித் தவிசாளர் ருக்மன் சேனநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் மைக்கல் பெரேரா, சரத் சந்திரராஜ கருணா ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக இடம்பெறுகின்றனர். கரு ஜயசூரிய தலைமையிலான அதிருப்திக் குழுவினர் அரசுடன் இணைவதைத் தடுப்பதற்கு கட்சியின் உள்ளக மட்டத்திலும் தனித்தனிப் பேச்சுகள் மூலமும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காத நிலையில், கடந்த வாரத்தில் ஜனாதிபதியை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து எம்.பி.க்களை அரசு பக்கம் எடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு தமது ஆட்சேபனையை வெளிக்காட்டியதோடு அப்படி நடக்குமானால், சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையில் செய்துகொள்ளப்பட்டிருக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கை அர்த்தமற்றுப் போய்விடுமெனவும் தெரிவித்திருந்தார். ஆனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவோ தாம் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து எவரையும் வலுக்கட்டாயமாக ஈர்த்தெடுக்க முயற்சிக்கவில்லையெனவும், தாமாக வந்து சேரப் போகிறவர்களை உதைத்துத் தள்ள முடியாதெனவும் பதிலளித்துள்ளார். அதேசமயம், இன்னமும் அமைச்சரவை மாற்றத்துக்கான இறுதி முடிவு எடுக்கப்படாமையால் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசு பக்கம் தாவ முயற்சிப்பவர்களை தடுத்து நிறுத்திக்கொள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அதனை ரணில் விக்கிரமசிங்க, தனது அரசியல் சாணக்கியத்தைக் கொண்டு சாதித்துக்கொள்ள முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இந்தநிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கட்சித் தலைமையகமான ஷ்ரீகொத்தாவில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடந்து முடிந்த பின்னர் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய ரணில் விக்கிரமசிங்க தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடும் திட்டத்தை முன்வைத்துள்ளார். இத்திட்டத்தை கட்சியில் ஒரு சிலர் எதிர்த்தபோதிலும் பெரும்பாலானோர் வரவேற்றுள்ளனர். இதனடிப்படையிலேயே காமினி ஜயவிக்கிரம பெரேரா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யும் பொறுப்பு கட்சித் தவிசாளர் ருக்மன் சேனநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக ஷ்ரீகொத்தா வட்டாரம் தெரிவித்தது.