இலங்கையில் இரு தரப்பு யுத்த நிறுத்த மீறல்கள். இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் மாத்திரம் சுமார் 200 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறும் போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்கள், இந்த சம்பவங்களுக்கு இரு தரப்புமே பொறுப்பு என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த ஜூலை மாதம் 22 திகதி விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டு பகுதியிலிருந்த மாவிலாறு அணைக்கட்டுக் கதவுகளை மூடியதனைத் தொடர்ந்து அரச படைகளிற்கும், விடுதலைப்புலிகளிற்கும் இடையே வடக்கு, கிழக்கு பகுதிகளில் கடந்த இரண்டு மாதமாக இடம்பெற்ற மோதல்களின் போது மாத்திரம் சுமார் 200 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு இன்று தெரிவித்துள்ளது. மாவிலாறு அணைக்கட்டுக் கதவுகளை மூடியதனாலும், அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் ஏற்பட்ட மோதல்களினாலும் விடுதலைப்புலிகள் யுத்த நிறுத்தத்தை மீறியிருக்கிறார்கள் என்றும் சம்பூர் பகுதிகளில் அரச படை நடவடிக்கை மேற்கொண்டதால் அவர்களும் அதனை பெரிய அளவில் மீறியிருக்கிறார்கள் என்றும் கண்கானிப்புக்குழுத் தலைவர் கூறியிருக்கிறார். கண்காணிப்புக்குழுவின் ஏனைய தீர்ப்புக்கள்.... 01. திருகோணமலையில் அரச கட்டுப்பாட்டுப்பாட்டிலுள்ள மூதூர் பகுதிகள் மீது வலிந்த தாக்குதலை நடத்தியது புலிகள் இழைத்த யுத்த நிறுத்த மீறல். 02. சம்பூர் பகுதிகளில் புலிகளின் கட்டுபாட்டிலிருந்த பகுதிகள் மீது அரச படைகள் வலிந்து தாக்குதல் நடத்தியது அரசபடைகள் இழைத்த யுத்த நிறுத்த மீறல். 03. அரச படைகளின் மீது யாழ்ப்பாணத்தில் புலிகள் மேற்கொண்ட வலிந்த தாக்குதல்கள் புலிகள் இழைத்த யுத்த நிறுத்த மீறல். 04. விடுதலைப் புலிகளுக்கெதிராக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் அரச படைகள் மேற்கொண்ட வலிந்த தாக்குதல்களும், முகமாலையின் கிழக்குப் பகுதிகளில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மீது அரச படைகள் வலிந்து தாக்குதல்களை நடாத்தியதும் அப்பகுதிக்குள் உள்புகுந்ததும் அரச படைகள் இழைத்த யுத்த நிறுத்த மீறல். 05. மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளுக்கு, பாதிக்கப்பட்ட பகுதிகளிற்கு யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவின் அதிகாரிகளுக்கு அனுமதியளிக்காது, சுயாதீன விசாரணைகளிற்கு இடமளியாதது அரச படைகளும், புலிகளும் அதாவது இரு தரப்பும் இழைத்த யுத்த நிறுத்த மீறல். 06. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களிற்கு உட்செல்லவும், வெளியேறவும் சிவிலியன்களுக்கும், அத்தியாவசியப் பொருட்களிற்கும் கட்டுப்பாடுகளை விதித்தது அரச படைகளும், புலிகளும் இழைத்த யுத்த நிறுத்த மீறல்.





