Thursday, September 28, 2006

பேச்சு தொடர்பில் இரு தரப்பினரும் சாதகமான பதிலை வழங்கியுள்ளனர் - எரிக் நேன்ஸ் பேர்க் சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்குபற்றுவதற்கான சாதகமான பதிலை அரசாங்கமும் புலிகளும் நோர்வேயிடம் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளனர். விரைவில் பேச்சுக்கள் ஆரம்பிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று நோர்வே தூதரகத்தின் முதன்மைச் செயலாளரும் பேச்சாளருமான எரிக் நேன்ஸ் பேர்க் கேசரிக்குத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: இணைத்தலைமை நாடுகள் பெல்ஜிய நாட்டின் தலைநகரான பிறஸல்ஸ் நகரில் இம்மாதம் 12ஆம் திகதி நடத்திய மாநாட்டின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் தடைபட்டுப்போயுள்ள சமாதான பேச்சுவார்த்தைகள் அடுத்த மாத முற்பகுதியில் எவ்வாறாயினும் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதில் இந்நாடுகள் மிகவும் உறுதியாக இருக்கும் செய்தி இரு தரப்பிற்கும் நோர்வேயால் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதன் பிரகாரம் ஜெனிவா பேச்சக்களின் போது அரசாங்க தரப்பு பேச்சுவார்த்தைகளுக்கான குழுவிற்கு தலைமை தாங்கிய அமைச்சரான நிமல் சிறி பால டீ சில்வாவை நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரஸ்கர் இம்மாதம் 14 ஆம் திகதி சந்தித்து பேச்சுக்களை மீள ஆரம்பிக்க இணைத்தலைமை நாடுகளின் அழுத்தம் குறித்து விரிவாக விளக்கியுள்ளார். அதேபோன்று இம்மாதம் 22 ஆம் திகதி தூதுவர் பிரஸ்கர் கிளிநொச்சி சென்று புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வனை சந்தித்து பேச்சுக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பாக பேசினார். நீங்கள் ஆயுதங்களை கீழே வையுங்கள் அப்போதுதான் பேச்சுவார்த்தை என்றோ அல்லது நீங்கள் தாக்குதல்களை நிறுத்தங்கள், ஏ9 பாதையை திறவுங்கள் என்பன போன்ற எந்த விதமான நிபந்தனைகளையும் இருதரப்புமே முன்வைத்து இழுபறிப்படாமல் முதலில் இருதரப்பும் நேருக்கு நேர் சந்தியுங்கள். பின்னர் அங்கு உங்களது பிரச்சினைகளைப் பற்றி பேசலாம் என இணைத்தலைமைகள் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது. இதற்கமையவே இருதரப்பும் தாம் அவ்வாறானதொரு பேச்சுக்களுக்கு தயார் என தமது சம்மதத்தை தெரிவித்துள்ளனர். இதேவேளை இறுதியாக இருதரப்பையும் நேருக்கு நேர் சந்திக்க வைப்பதற்காக கண்காணிப்புக்குழு விவகாரத்தை முன்னிறுத்தி ஒஸ்லோவிற்கு இருதரப்பையும் வரவழைத்த போதும் இவர்கள் இறுதி நேரத்தில் பேச்சுக்களில் கலந்து கொள்ளாமல் முறித்துக் கொண்டு திரும்பி வந்தனர். பாரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தை முறிவடைந்ததைப் போன்ற தவறுகள் எதுவும் இம்முறை நடைபெறாமல் இருக்க மிக அவதானமாக நோர்வேயை செயற்படுமாறும் முடிந்த வரை ஏற்பாடுகள் முழுமையாக முடிவடையும் வரை பாரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் விதத்தில் ஊடகங்களில் செய்திகள் வெளிவருவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் இணைத்தலைமையின் ஏனைய அங்கத்துவ நாடுகள் நோர்வேக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.