Wednesday, September 27, 2006

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள்: முதல்வர் திருமா சந்திப்பு அதிமுக அணியில் விடுதலைச்சிறுத்தைகளுக்கு போதுமான சீட் வழங்கப்படவில்லையென்று விடுதலை சிறுத்தைகள் அமைப்புக்குள் பலத்த அதிருப்தி ஏற்பட்டது. பல மாவட்டங்களில் விடுதலைச்சிறுத்தைகள் உறுப்பினர்கள் தனித்து போட்டியிடுவது என்று அறிவிக்க குழப்பத்திற்குள்ளானார் திருமாவளவன். இந்நிலையில் ஜெயலலிதாவிடம் பேச நேரம் கேட்டார் திருமா. தோட்டத்திலிருந்து சாதகமான பதில் வராததால் அறிவாலயம் பக்கம் தூதுவிட்ட திருமா திமுக தலைவர் கருணாநிதியை இன்று இரவு ஏழு மணிக்கு சந்தித்தார். முக்கால் மணி நேரம் நீடித்த சந்திப்பிற்கு பின்னர் பேசிய கருணாநிதி ," திமுக அணியில் எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து விடுதலை சிறுத்தைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் . குறைந்தது இரண்டு நகராட்சிகளாவது ஒதுக்கப்படும் என்ன சின்னத்தில் போட்டியிடுவது என்பது பற்றி இன்னும் முடிவாகவில்லை. எத்தனை சதவீதம் என்று கேட்டு பிரச்னை எழுப்பாதீர்கள்" என்றார்.நிருபர்களிடம் பேசிய திருமா," அதிமுக அணியில் அவமரியாதைக்கு உள்ளானோம். நாலு சதவீதம் ஒதுக்கப்பட்டதால் கடைசி நேரத்தில் எங்கள் இயக்கத்தில் பிரச்னை ஏற்பட்டது. அது தொடர்பாக அதிமுக கூட்டணி தலைமையிடம் உடனே தொடர்பு கொள்ள முடியாதபடி அங்கு பல சுவர்கள். சுயமரியாதைக் கொள்கை கொண்ட எங்கள் இயகக்ம் இழிவுபடுத்தப்பட்டபோது வாஞ்சையுடன் திமுக தலைவர் வரவேற்று ஏற்றுக் கொண்டார்." என்றார்