யாழ்ப்பாண குடாநாட்டிற்கு, மாதம் ஒன்றிற்கு 10 ஆயிரம் மெட்ரிக் தொன் அத்தியாவசிய பொருட்கள் தேவை யாழ்ப்பாண குடாநாட்டிற்கு, மாதம் ஒன்றிற்கு 10 ஆயிரம் மெட்ரிக் தொன் அத்தியாவசிய பொருட்கள் தேவையென தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமது தகவலுக்காக அந்த கூட்டமைப்பு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயத்தின் கூற்றையும், சுட்டிக் காட்டியுள்ளது. எனினும், கடந்த 45 நாட்களில், அரசாங்கத்தின் புள்ளி விபரப்படி 7 ஆயிரத்து 685 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள் மாத்திரமே சென்றடைந்துள்ளாதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் மற்றும் சிவநேசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அரசாங்கம் உணவுப் பொருட்களை அனுப்பி வைத்துள்ள பொழுதிலும், அரிசி ஒரு கிலோ 135 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. சீனி ஒரு கிலோ 250 ரூபாவிற்கும், கோதுமை மா ஒரு கிலோ 150 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குழந்தைகளுக்கான பால் மாக்களை, 500 ரூபாவிற்கும், பெற முடியாமல் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் மனித அவலம் இல்லை என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரட்ன தெரிவித்த கருத்தை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுக்களை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரத்ன நிராகரித்துள்ளார். உரிய அத்தியாவசிய பொருட்கள் யாழ்ப்பாண குடாநாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. எதிர்காலத்திலும், பல தொகுதி அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. இதனை அடுத்து உரிய விநியோகப் பணிகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.





