Friday, December 31, 2010

கிழக்கில் வெள்ளப்பாதிப்பு மிக மோசமாக அதிகரிப்பு!

கிழக்கு மாகாணத்தில் பல தினங்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பெருமளவான பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் சுமார் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் பார்க்கும் இடங்களெல்லாம் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கின்றன.

பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுவாசல்களை இழந்து பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளன. மக்கள் குடியிருப்புகள், வீதிகள், வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் வீதிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மழை இனிமேலும் தொடருமானால் வெள்ள நிலைமை மேலும் மோசமடையுமென அஞ்சப்படுகிறது.

நேற்று முன்தினம் பகல் 12 மணி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35,847 ஆகும். இவர்கள் 81,068 குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர். இந்த பாதிப்புத்தொகை நேற்று மாலை மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்பட்டது.

இருபதுக்கு மேற்பட்ட நலன்புரி நிலையங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 1704 குடும்பங்களைச் சேர்ந்த 6408 பேர் நலன்புரி நிலையங்களிலும், 10829 குடும்பங்களைச் சேர்ந்த 41702 பேர் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்துக் குளங்களும் நிரம்பி வழிவதால் குளங்களை அண்டிய பிரதேசங்கள் வாவிக்கரையோரங்களை அண்மித்த கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

வெள்ளத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமை அபாயகரமாகவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் கூறினார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பல கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அக் கிராமங்களுக்கான போக்குவரத்தை நடத்த கடற்படையினரின் உதவியை நாடியுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

நலன்புரி நிலையங்களில் தங்கியு ள்ளவர்களுக்கான சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதுடன் சகல பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் ஈடுபட்டுவருவதாகவும், அரச சார்பற்ற நிறுவனங்களும், இவர்களுக்கு உதவி வருவதாகவும் அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நீர்ப்பாசனக் குளங்களான உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள், நவகிரி, உறுகாமம், வாக னேரி போன்ற குளங்களின் வான் கதவுகளும், நேற்றுக்காலை திறந்து விடப்பட்டதாக பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ். மோகன்ராஜ் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை 145.6 மில்லி மீற்றர் மழை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையம் தெரிவித்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் மழை சற்றுத் தணித்திருந்த போதிலும் நேற்று முன்தினம் முதல் அடைமழை பொழிகிறது. இம் மாவட்டத்திலும் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தாழ் நிலப் பிரதேச மக்கள் மேட்டு நிலப் பிரதேசங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருவதுடன் தமது உறவினர்களில் வீடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

கல்முனை தமிழ் பிரிவு சாய்ந்தமருது, கல்முனை முஸ்லிம் பிரிவு, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச் சேனை பிரதேச செயலாளர் பிரிவு கள் அடைமழை காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. பல பாடசாலைகளும் மழை வெள்ளத் தினால் சூழப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக மழை பெய்யுமானால் திங்கட்கிழமை முதலாம் தவணை நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை திறக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என அதிபர்கள் தெரிவிக் கின்றனர்.

தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள சொறிக்கல் முனை கிராமத்தைச் சேர்ந்த மயான வீதியில் உள்ள இரு வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. எனினும் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை.

வயல் நிலங்கள் யாவும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. குடலைப் பருவத்தில் உள்ள வயல் நிலங்களில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதனால் பெரும் சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அடைமழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்திற்கான கிண்ணியா ஊடான போக்குவரத்தும், திருகோணமலை ஊடான கடற்போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டதனால் மக்கள் பிரயாணம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய காத்தான்குடி, பாலமுனை, பூநொச்சி முனை, கல்லடி போன்ற பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டும் வெளியேறி பாடசாலைகளிலும் பள்ளிவாயல்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன.

அம்பாறை மாவட்டத்தில் இன்னும் சில வாரங்களில் அறுவடைக்காக காத்திருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மைப் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அக்கரைப்பற்று, அட்டாளைச் சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனைக்குடி, கல்முனை, மருதமுனை நற்பிட்டி முனை, உகனை போன்ற பிரதேசங்களில் உள்ள பல நூற்றுக்கணக்கான மக்களின் குடியிருப்புகள் வெள்ள நீரினால் சூழப்பட்டுள்ளன.

பிரதான வீதிகள் மற்றும் கிராமப்புற வீதிகள் பல நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. மீனவர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்லவில்லை. இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உலருணவு அடங்கிய நிவாரணப் பொதிகளை உடனடி யாக வழங்க மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. வெள்ளப் பிரதேசங்களுக்குச் சென்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்னல் தாக்கத்திற்கு ஒரு பெண் பலியாகி உள்ளதுடன் பலர் காயத்துக்குள்ளாகியுள்ளனர். திருப்பெருந்துறையைச் சேர்ந்த திருமதி நேசத்துறை வயது 50 என்ற பெண்மணியே பலியாகியுள்ளார்.

மட்டக்களப்பு, காத்தான்குடி, ஆரையம்பதி, சிகரம், நாவற்குடா, கல்லடி, பூநொச்சிமுனை, முகத்து வாரம், செங்கலடி, களுவாஞ்சிகுடி, குருக்கள் மடம், வாழைச்சேனை, ஏறாவூர், சித்தாண்டி ஆகிய பகுதிகள் யாவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் ஐயாயிரத்திற்கு மேற்பட்டோர் இடம்பெயர்ந்து ள்ளதாகவும் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

ஏறாவூர் நகர பிரதேசம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது. போக்குவரத்துச் சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன.

வாகரை, கிரான், வாழைச்சேனை, ஓட்டமாவடி, ஏறாவூர்ப் பற்று, ஏறாவூர்நகர் காத்தான்குடி மற்றும் வவுணதீவு போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.