Sunday, November 18, 2007

மாவீர்களைத் தொடர்ந்து விதைக்க முடியாது- விடுதலையை விரைவில் வென்றெடுக்க வேண்டும்: க.வே.பாலகுமாரன்

[ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2007]

மாவீரர்களைத் தொடர்ந்து விதைக்க முடியாது விரைந்து நாம் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பாடசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வில் அவர் பேசியதாவது:

மாவீரர்களின் ஈகங்கள் காரணமாக எமது விடுதலைப் பயணம் பெரும் இடர்களை தாண்டி வெற்றி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. எமது விடுதலைப் போராட்டம் இன்று ஒரு திருப்புமுனையான காலகட்டத்தில் நிற்கிறது. எதிரிகள் தூக்கமின்றி உள்ளனர். மகிந்த ராஜபக்ச தனது ஆட்சியின் பலாபலன்களை அனுபவிக்கும் காலம் நெருங்கி வருகிறது. இந்திய தமிழக அரசியல் எமது விடுதலைப் போராட்டத்திற்கு வாய்ப்பான சூழலை உருவாக்கி வருகிறது.

எமது விடுதலையை விரைவில் வென்றெடுக்க வேண்டிய நிலையில் தமிழினம் உள்ளது. மாவீரர்களை தொடர்ந்து விதைக்க முடியாது. விடுதலையை வென்றெடுக்க அனைவரும் மாவீரர்களின் கனவு சுமந்து அணி திரள்வோம் என்றார் அவர்.

முற்பகல் 10:30 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் ஏற்றினார்.

தமிழீழத் தேசியக் கொடியினை வடபோர்முனை தளபதிகளில் ஒருவரான ஜெரி ஏற்றினார்.

மாவீரர் திருவுருவப் படங்களுக்கு ஈகச்சுடர்களேற்றி மலர்மாலைகள் பெற்றோர் சூட்டினர்.

க.வே.பாலகுமாரன், மாவீரர் பணிமனை பணிமுதல்வர் பொன்தியாகம், பாடசாலை அபிவிருத்தி சங்கச்செயலாளர் குணசீலன் ஆகியோர் கருத்துரைகளை நிகழ்த்தினர். பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகள் நடைபெற்றன.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.