Monday, November 26, 2007

வன்னியில் இன்றும் அகோர வான்குண்டு வீச்சு: சிறுவன் படுகாயம்- 18 வீடுகள் சேதம்.!!

[திங்கட்கிழமை, 26 நவம்பர் 2007]

சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் வன்னியில் இன்று இரண்டாவது நாளாகவும் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து கடும் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியதில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார். 4 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 14 வீடுகள் கடுமையாக சேதமடைந்தன.

புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதியை அண்மித்த 2 ஆம் வட்டராம் மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று திங்கட்கிழமை மாலை 5:00 மணியளவில் மிக்-27 ரக வானூர்திகளும், கிளிநொச்சியில் இன்று மாலை 5:20 மணியளவில் கிபீர் ரக வானூர்திகளும் இக்குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்தின.

புதுக்குடியிருப்பு 2 ஆம் வட்டராம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டன. இத்தாக்குதலில் 4 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 7 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. அப்பகுதியில் இருந்த கத்தோலிக்க கன்னியர் மடமும் இத்தாக்குதலில் சேதமடைந்துள்ளது.

மிக்-27 ரக வானூர்திகள் குண்டுகளை வீசுவதற்காக வானில் வட்டமடித்தபோது மக்கள் பாதுகாப்பு தேடிக்கொண்டதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இத்தாக்குதலில் வீடுகளை இழந்த மக்கள் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பில் நடத்தப்பட்ட வான்குண்டு வீச்சுத் தாக்குதலில் க.மகாலிங்கசிவம், த.கனகையா, ம.சிவகுமார், சி.ஜீவானந்தம், வ.நடராசா ஆகியோரின் வீடுகளே முற்றாக சேதமடைந்துள்ளன.

சி.தசரதன், மு.கந்தசாமி, வ.செல்வரத்தினம், வி.கனகசபாபதி, செ.வேலுப்பிள்ளை, சு.தங்கவேல், சி.சுந்தரலிங்கம், கு.விக்கினராசா, ந.சத்தியமூர்த்தி, தே.தவராசசிங்கம், மு.சிவராசா ஆகியோரின் வீடுகளே சேதமாகியுள்ளன.

கிளிநொச்சி நகரில் இருந்து மூன்று கிலோமீற்றர் தூரத்தில் உள்ள மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து கிபிர் ரக வானூர்திகள் நடத்திய தாக்குதலில் காந்தி நிலையச் சிறுவன் பத்மராஜ் (வயது 18 ) படுகாயமடைந்துள்ளார்.

இந்த வான்குண்டு வீச்சு நடைபெற்ற பகுதியில் இருந்த பொதுமக்களின் 7 வீடுகளும் பாடசாலை ஒன்றும் அஞ்சல் நிலையம் ஒன்றும் மருந்தகம் ஒன்றும் சேதமடைந்துள்ளன.

கிபிர் ரக வானூர்திகளின் பேரிரைச்சலினால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயினர். பலர் அதிர்ச்சியில் மயக்கமடைந்தனர்.

இதேவேளை, இன்று முற்பகல் பளை, இயக்கச்சிப் பகுதி மீதும் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் கடும் குண்டுவீச்சுகளை நடத்தின. இத்தாக்குதலிலும் மக்களின் குடியிருப்புக்கள் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வன்னியில் மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் வன்னியில் சிறிலங்கா வான்படை வானூர்திகள் குண்டுவீச்சுகளை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.