Sunday, January 30, 2011

எரிக் சொல்ஹய்ம் எங்களுக்காக ஏதேனும் செய்யவிரும்பினால் இலங்கை அரசிடம் மட்டும் பேசட்டும்; இனப் பிரச்சினையை தீர்க்குமாறு…!

இலங்கை அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழர்களுக்குமிடையே மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என நோர்வேயின் அமைச்சர் எரிக் சொல்ஹய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசை உருவாக்கியுள்ளவர்களுக்குமிடையே பேச்சு வார்த்தை நடத்துவதற்கான பங்களிப்பைத் தான் ஆற்றமுடியும் என எரிக் சொல்யஹய்ம் கூறியிருப்பது தமிழ் மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கும் என்பதில் ஐயமில்லை.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே பேச்சுவார்த்தை இடம் பெற்றபோது நோர்வேயின் அனுசரணைப் பணியில் எரிக் சொல்ஹய்ம் சிறப்புத் தூதுவராக செயற்பட்டார். அரசாங்கத்தையும், விடுதலைப் புலிகளையும் பேச வைப்பதில் அவர் கடுமையாக உழைத்தார் என்பதில் இருவேறு கருத்துக்கு இடம் இல்லை.

எரிக் சொல்ஹய்ம் சிறப்புத் தூதுவராக செயற்பட்ட காலத்தில் ஜாதிக யஹல உறுமயவும், ஜே.வி.பியும் அவரைக் கடுமையாக விமர்சித்தன. இலங்கை நாடாளுமன்றத்தில் அவரின் தனிப்பட்ட விடயங்களைக் கூட பிரஸ்தாபிக்கும் அளவுக்கு எரிக் சொல்ஹய்முக்கான எதிர்ப்பு தென் பகுதியிலிருந்தது.

அதேநேரம் பேச்சுவார்த்தை மூலம்-சமாதான வழியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முயற்சிக்கும் எரிக் சொல்ஹய்முக்கு தமிழ் மக்கள் தங்கள் மானசீகமான ஆதரவை வழங்கினர்.

குறிப்பாக வன்னிக்குச் சென்று விடுதலைப் புலிகளை அவர் சந்தித்தபோதெல்லாம் அவர் மீது வன்னி பெரு நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் பரிபூரண நம்பிக்கை கொண்டிருந்தனர். துரதிர்ஷ்டவசமான பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றன. அதுவரை எரிக் சொல்ஹய்ம் நடந்து கொண்டமை திருப்தியானவை; ஏற்புடையவை.

ஆனால் வன்னியில் போர் நடந்தபோது, தமிழ் மக்கள் யுத்தத்தில் சிக்கி தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியாமல் கையேந்திய போது எரிக் சொல்ஹய்ம் மெளனமாக இருந்தாரே. அது மகாதவறு. மன்னிக்க முடியாத பாவம்.

நோர்வேயின் நடுவீதியில் நின்று ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என எரிக் சொல்ஹய்ம் கூக்குரலிட்டிருக்க வேண்டும். அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும், இந்தியாவுக்கும் ஓடி ஓடிச்சென்று ஐயா… வன்னியில் தமிழ் பொதுமக்கள் படும் துன்பம் கொடூரமானது. அவர்களைக் காப்பாற்றுங்கள் எனக் கேட்டிருக்கவேண்டும்.

அரசுக்கும் புலிகளுக்குமிடையில் நடந்த பேச்சுவார்த்தையில் சிறப்புத் தூதுவராக கடமையாற்றிய எரிக் சொல்ஹய்மிடம் தமிழ்மக்கள் இதனையே எதிர்பார்த்திருந்தனர். ஆனால் எரிக் சொல்ஹய்ம் மெளனத்தையே கடைப்பிடித்தார்.

அத்தகைய ஒருவர் இப்போது அரசுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்குமிடையில் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயார் என சொல்லியிருப்பது அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அவர் எங்களுக்காக ஏதேனும் செய்யவிரும்பினால் இலங்கை அரசிடம் மட்டும் பேசட்டும். இனப் பிரச்சினையை தீர்க்குமாறு…

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.