Wednesday, January 26, 2011

எல்லை தாண்டினால் மீனவர்களை சுடுவோம் என்று கூறும் நாடு எப்படி நட்பு நாடாக இருக்க முடியும் – சீமான்

எல்லை தாண்டினால் மீனவர்களை சுடுவோம் என்று கூறும் நாடு எப்படி நட்பு நாடாக இருக்க முடியும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தின் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனத்தை சேர்ந்த மீனவர் ஜெயக்குமாரை இலங்கை கடற்படையினர் படுகொலை செய்ததை கண்டித்து நெல்லை சந்திப்பு தொடரூந்து நிலையத்திற்கு எதிரில் நாம் தமிழர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சீமான் இதனை குறிப்பிட்டுள்ளார். கடந்த 60 ஆண்டுகளாக ஈழ மண்ணிலுள்ள தமிழர்களையும் இங்குள்ள தமிழர்களையும் சக மனிதர்களாக கருதாமல் இலங்கை இராணுவத்தினர் கொன்று குவிக்கின்றனர். இந்திய அரசு கரம் நீட்டி தடுப்பதற்கு பதிலாக இதற்கு கரம் கொடுத்து உதவுகிறது. இதுவரை 538 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலையை தடுத்து நிறுத்த துடித்தால் என்னை தேசத்துரோகி என்கின்றனர்.

இந்த நாட்டின் குடிமகனான மீனவன் கொல்லப்படுவதை கடற்படை தடுக்க வேண்டாமா? தமிழகத்திற்கு வந்த இந்திய மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இதைப்பற்றி பேசும்போது கூட இலங்கை நட்பு நாடு என்கிறார். எல்லை தாண்டினால் மீனவர்களை சுடுவோம் என்று கூறும் நாடு எப்படி நட்பு நாடாக இருக்க முடியும் பகை நாடாக கருதப்படும் பாகிஸ்தான்கூட இதுவரை ஒரு இந்திய மீனவரையும் கொல்லவில்லை.

எனவே, இலங்கையுடனான உறவை இந்தியா துண்டிக்க வேண்டும். கூட்டுப்படை பயிற்சியில் ஈடுபடக்கூடாது. எந்த உதவியும் செய்யக்கூடாது. திமுக எத்தனை இடம் கொடுத்தாலும் அத்தனை இடங்களிலும் காங்கிரசை தோற்கடிப்போம் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.