Monday, May 03, 2010

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து காங்கிரஸிடம் வலியுறுத்துவாரா கருணாநிதி?

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி சந்தித்து இலங்கைத் தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகார பகிர்வு குறித்து வலியுறுத்தவுள்ளதாக தெரிய வருகின்றது.

இந்திய மாநிலங்களின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பான கூட்டங்கள் நாளை நடைபெறவுள்ளது. இக்கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் கருணாநிதி இன்று டில்லிக்கு சென்றுள்ளார்.

இவர் டில்லி செல்லும் போதெல்லாம் பிரதமர் மன்மோகன் சிங்கையும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியையும் சந்திப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர்.

இந்நிலையில், இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து முதலமைச்சர் கருணாநிதி காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுடன் பேசுவாரா என ஊடகவியலாளர்கள் தி.மு.க.வின் நாடளுமன்ற உறுப்பினர் இளங்கோவனிடம் கேட்ட போது,

தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களான நலன்புரி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை விரைவில் மீள் குடியமர்த்தவும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதி தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு ஏற்ற வகையில் அதிகார பகிர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களிடம் முதலமைச்சர் வலியுறுத்துவார் என இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரை மனித்தாபிமான அடிப்படையில் சென்னைக்கு வர அனுமதித்து, தமிழ்நாட்டில் உயர் சிகிச்சைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய அரசிடம் அவர் வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைத் தமிழ் மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்துவார் எனவும் தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.