Wednesday, April 21, 2010

மும்பை - பெங்களூர் மோதும் முதலாவது அரை இறுதி ஆட்டம் இன்று

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் முதல் அரையிறுதி ஆட்டம் மும்பையில் இன்று புதன்கிழமை இரவு 8.00 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் ரோயல் சாலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

இரு அணிகளின் தலைவர்களுமே இந்திய அணிக்கு தலைமை வகித்த அனுபவம் இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் அந்த அணிக்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை. அதுவே அந்த அணிக்கு கூடுதல் பலமாகவும் அமைந்துள்ளது. அதேசமயம் மும்பை அணி இதுவரை நடந்த முடிந்த சுற்றுப் போட்டிகளில் அதிகபட்ச வெற்றியைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

மும்பை 14 போட்டிகளில் விளையாடி 10இல் வெற்றியும், 4இ-ல் தோல்வியும் அடைந்து 20 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. பெங்களூர் 7இல் வெற்றியும், 7இல் தோல்வியுடன் 14 புள்ளிகளுடன் 4ஆ-ம் இடத்தில் உள்ளது.

மும்பை அணித் தலைவர் டெண்டுல்கர், நடப்பு ஐபிஎல் போட்டிகளில் அதிகபட்ச ஓட்டம் எடுத்து அதாவது 14 போட்டிகள் மூலம் 561 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார். மேலும் அவரது அனுபவமும் அந்த அணிக்குக் கூடுதல் பலத்தை அளித்துள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் பிராவோ தலைமையில் அந்த அணி விளையாடி தோல்வியைத் தழுவியது. அணியை வழிநடத்த டெண்டுல்கர் வேண்டும் என்பதையே இந்த தோல்வி காட்டுகிறது.

டெண்டுல்கருடன் சேர்ந்து இலங்கை வீரர் ஜயசூர்யா தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவது அந்த அணிக்கு பெரிய பலத்தை அளிக்கிறது. ஆனால் அவர் விளையாடுவாரா என்பது சந்தேகமே. 'ஓல்ரவுண்டர்' ஷிகார் தவாண் அண்மையில் நடந்த போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. எனினும் சௌரவ் திவாரி மற்றும் அம்பட்டி ராயுடு ஆகிய இருவரும் அந்த அணியில் டெண்டுல்கருக்கு இணையாக விளையாடி வருகின்றனர்.

தென் ஆபிரிக்க வீரர் டுமினியும், 'மிடில் ஓர்டர் ' பேட்ஸ்மேன் பொல்லார்டும் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். பந்துவீச்சில் ஹர்பஜனும், ஜாகீர்கானும் இதுவரை சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளனர்.

எனவே துடுப்பாட்டம், களத்தடுப்பு, பந்துவீச்சு என அனைத்திலும் மும்பை அணி சிற்ந்தே காணப்படுகிறது.

பெங்களூர் அணி

அனில் கும்ப்ளே தலைமையிலான பெங்களூர் அணியில் பல முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தென் ஆபிரிக்க வீரர் ஜாக்ஸ் காலிஸ் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக அதிகஓட்டங்கள் எடுத்த பட்டியலில் உள்ளார்.

அதேபோல் அனுபவமிக்க ட்ராவிட், விராட் கோலி, மணீஷ் பாண்டே, ரொபின், உத்தப்பா, ராஸ் டெய்லர், கெவின் பீட்டர்சன் போன்ற வீரர்கள் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். கும்ப்ளே, ஸ்டெய்ன், காலிஸ், பிரவீண் குமார் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.

பெங்களூரில் கடைசியாக நடைபெற்ற போட்டியில் மும்பையிடம் அந்த அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதற்குப் பழிவாங்க இன்றைய முதல் அரையிறுதிப் போட்டி பெங்களூர் அணிக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

முதல் அரையிறுதிப் போட்டி பெங்களூரில் நடத்தப்படுவதாக இருந்தது. கடைசியாக பெங்களூரில் நடந்த போட்டியின்போது அடுத்தடுத்து குண்டுவெடித்ததால், பாதுகாப்பு கருதி போட்டி மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது. , , , , ,

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.