Friday, April 09, 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அதன் கொள்கைகளையும் தமிழ் மக்கள் ஆதரித்துள்ளனர்: இரா.சம்பந்தன்

எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் தெரிவித்த கொள்கைகளை ஆதரித்து தமிழ் மக்கள் கூடுதலாக வாக்களித்துள்ளார்கள். வேறு எந்தத்தமிழ்க்கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் சிறிதளவு கூட வாக்களிக்கவில்லை.

தமிழ் மக்கள் மிகவும் கூடுதலான அளவில் ஏகோபித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அதன் கொள்கைகளையும் ஆதரிக்கின்றனர் என்பது இத்தேர்தல் மூலம் வெளிப்படுத்தப்படடுள்ளது.தமிழ் மக்கள் சார்பில் ஆக்கபூர்வமாக நிதானமாக செயல்படக்கூடிய ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை தமிழ் மக்கள் இத்தேர்தல் மூலம் தெளிவாக்கியுள்ளனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கணிசமான அளவு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெறிறியடைந்துள்ளது சில பல காரணங்களின் நிமித்தம் விசேடமாக அரசாங்கத்தின் சில செயல்பாடுகளின் நிமித்தம் எமது வெற்றியின் தரம் ஒரு சிறிய அளவில் குறைவுபட்டிருக்கலாம். ஆனால் அந்த வெறிறியின் பின்னால் உள்ள நியாயத்தை அரசாங்கத்தின் செயல்பாடுகள் மழுங்கடிக்கமுடியாது.

நாம் சற்று மேலதிகமாக ஆசனங்களை எதிர்பார்த்திருந்த போதிலும் கூட தேர்தல் முடிவுகள் எமக்கு திருப்தியளிக்கவில்லை என்று கூறமுடியாது.

பொறுப்பற்ற முறையில் சில கட்சிகள் தேர்தலுக்கு முன்பாக செயல்பட்ட காரணத்தின் நிமித்தமும் பல்வேறு கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் தேர்தல் களத்தில் இற்க்கப்பட்ட காரணத்தின் நிமித்தமும் தேவையற்ற குழப்பம் எமது மக்களின் சிந்தனையில் ஏற்படுவதற்கு வழிவகுத்தது. இந்தக் குழப்பநிலை ஏற்பட்டிருக்காவிட்டால் மக்களின் வாக்களிப்பு எமது சார்பாக மேலும் அதிகரித்து இருக்கலாம். ஆதன்மூலம் எமது ஆசனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கலாம்.

ஆனால் இக்கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் மக்களால் முழுமையாக நிராகரிக்க்பட்டு, இன்றைக்கு எமது மக்கள் மத்தியில் செல்லாக்காசாக தோற்றமளிக்கின்றன. இவ்ரகள் தற்போது உண்மையை உணர்ந்து மக்களின் நலன் கருதி தங்களுடைய செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எமது எதிர்கால செயல்பாடுகள் குறித்து தெளிவாக விளக்கியிருக்கின்றோம். ஒரு அரசியல் தீர்வை நிதானமான முறையில் எட்டுவது எமது முக்கியமான பொறுப்பு என கருதுகின்றோம். இதனையே எமது மக்களும் எதிர்ப்பார்க்கின்றனர் என்பதில் எவ்வித ஐயமும் இருக்கமுடியாது.

எமது லட்சக்கணக்கான மக்களின் உடனடித்தேவைகள் குறித்து திருப்திகரமான செயல்பாட்டை மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர் என்பது நாம் எல்லோரும் அறிந்த விடயம். இவ்விடயங்கள் சம்பந்தமாக திட்டங்கள் தீட்டி ஆக்கபூர்வமான முறையில் நாம் செயல்படுவோம். எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு விரைவில் கூடி இவ்விடயங்கள் சம்பந்தமாக முடிவு எடுக்கும்.

புலம்பெயர் தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் வாழுகின்ற தமிழ் மக்களுடைய எதிர்காலத்திற்கு பாரிய பங்களிப்பை செய்யக்கூடியவர்கள் என்பதை உணருகின்றோம்., ஏற்றுக்கொள்ளுகின்றோம். அவர்களுடன் எமக்கு தொடர்பு உண்டு. எமது தொடர்புகள் நீடிக்க வேண்டும், வலுப்பெற வேண்டும். எமது மக்களுடைய எதிர்கால பலத்திற்காக இவை பயன்படுத்தப்பட வேண்டும். அதை அடைவதற்காக நாம் அனைவரும் ஒருமித்து செயற்பட வேண்டும். இந்த நிலைமை தாமதமின்றி ஏற்படுவதை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

எவருடைய சுதந்திரத்தையும் எவராலும் கட்டுப்படுத்த முடியாது என்று நாம் உணருகின்றோம்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.