Saturday, December 19, 2009

நமது இலட்சியம் தமிழீழம் என்பதை உலகறியச் செய்யும் வாய்ப்பு கனடாத் தமிழருக்குக் கிடைத்திருக்கின்றது - பழ.நெடுமாறன்


நமது இலட்சியம் தமிழீழம் என்பதை உலகறியச் செய்ய
அதற்கான வாய்ப்பு கனடாத் தமிழருக்குக் கிடைத்திருக்கின்றது என இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். நாளை கனடாவில் நடைபெறவுள்ள வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையிலான இறைமையுள்ள சுதந்திரத் தமிழீழத் தனியரசுக்கான வாக்குக் கணிப்பு குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

உலகத் தமிழருக்கு மிருந்த நெருக்கடியும் அறைகூவல்களும் ஏற்பட்டிருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த வேளையில் நாம் எந்தவித குழப்பத்திற்கும் ஆளாகாமல், நாம் நடந்து வந்த இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்பதற்கான மனதிடம் நம்மிடம் இருக்க வேண்டும். 30 ஆண்டு காலத்திற்கு மேலாக அறவழியில் பல்வேறு போராட்டங்களை நடத்தி பல்வேறு உடன்பாடுகளைச் செய்து, எதுவும் பலன் அளிக்காத நிலையிற்றான் 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தமிழர்கள் மறைந்த தலைவர் தந்தை செல்வா தலைமையில் ஒன்றுகூடித் தமிழீழத் தனிநாடு ஒன்றதான் எங்கள் பிரச்சனைக்குத் தீர்வு வேறு வழி இல்லை என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்கள்.

1976 ம் ஆண்டில் இருந்து வட்டுக்கோட்டை தீர்மானம் ஒன்றுதான் ஈழத்தமிழருக்குக் கலங்கரை விளக்காகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆதற்கு அடுத்த ஆண்டு 1977 இல்தான் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்வைத்துதான் அன்றைய நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியீட்டினார்கள். ஈழத்தமிழ் மக்கள் தமிழீழக் கோரிக்கைக்கு முழுமையாக ஆதரவாக இருக்கின்றார்கள் என்பதை உலகுக்குக் காட்டினார்கள். ஆதற்குப் பிறகு நடைடிபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்pற்கு ஆதரவாக தமிழர்கள் வாக்களித்து வந்திருக்கின்றார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

ஆனால் இன்றைக்குச் சில பேர் தனிநாடு கேட்பதால் எந்தப் பயனும் இல்லை, சிங்கள அரசு கொடுப்பதைப் பெற்றுக்கொண்டு வாழ்வோம் என உபதேசம் செய்வதற்குக் கிளம்பியிருக்கின்றார்கள். இத்தகையவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்கள் எதற்காக இதைச்சொல்கின்றார்கள் என்பதைப் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அருமைத் தமிழர்களே என்றைக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானந்தான் என்றைக்கும் தமிழர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு ஆகும். ஆதற்கு மாறாக நாம் ஒருபோதும் செயற்படக் கூடாது. எனவே எமது தமிழ் மக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்ற இலட்சியத்தின் மீது உறுதியாக நிற்கவேண்டும் அதைப் பின்பற்ற வேண்டும் என வேண்டுகின்றேன்.

நெருக்கடி மிகுந்த இந்தக் காலகட்டத்தில எந்தவித சலனங்களுக்கோ சபலங்களுக்கோ ஆளாகாமல், எந்தவிதமான மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் இரையாகாமல், நாம் நிமிர்ந்து நின்று, நமது இலட்சியம் தமிழீழம் என்பதை உலகறியச் செய்ய வேண்டும். அதற்கான வாய்ப்பு நாளை கனடாத் தமிழருக்குக் கிடைத்திருக்கின்றது. கனடாத் தமிழர்கள் அனைவரும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஏற்று அதற்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.