எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்து அவருக்கு இன்னொரு சந்தர்ப்பத்தை நாம் வழங்க வேண்டும். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கான முழுப்பொறுப்பையும் ஈ.பி.டி.பி. ஏற்றுக்கொள்ளும். அதனை நான் உறுதிபடக் கூறுகின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும், ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமுமான கே.என். டக்ளஸ் தேவானந்தா, நேற்று யாழ்.ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள தனது கட்சியின் அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷக்கு வாக்களிக்க வேண்டும் என எமது மக்களிடம் நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதனால் கிடைக்கும் பெறுபேறுகளுக்கான முழுப்பொறுப்பையும் நாம் ஏற்றுக்கொள்ளுவோம்.
இனிவரும் காலங்களில் இணக்க அரசியல் மூலம்தான் நாம் எமது உரிமைகளைப் பெறவேண்டும். கடந்த காலங்களில் ஜனநாயக ரீதியிலும், ஆயுதப் பலம் மூலமும் நடத்தப்பட்ட போராட்டம் எமக்கு எதனையும் பெற்றுத்தரவில்லை. மாறாக எம்மிடம் உள்ள அனைத்தையும் நாம் இழந்து இப்போது எமது மக்கள் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இணக்க அரசியல் என்பது அடிமைத்தன அரசியல் அல்ல.ஜனாதிபதி சந்திரிகா தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைத்த போது பல்வேறு தடைகள் இருந்தன. ஆனால் இப்போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு அந்தத் தடைகள் இல்லை. அதற்காக அவருக்கு நாம் இன்னொரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். அதனை விட்டு புதிய ஜனாதிபதியாக ஒருவரைத் தெரிவு செய்வதன் மூலம் அவரிடம் தீர்வு எதனையும் நாம் எதிர்பார்க்க இயலாது.
மஹிந்த ராஜபக்ஷக்கு ஒரு சந்தர்ப் பத்தை கொடுப்பதில் என்ன தவறு? அதனால் நாம் எதை இழக்கப்போகிறோம். சரத் பொன்சேகா எமது பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் யார் பொறுப்பு? மஹிந்த ராஜபக்ஷ தீர்க்காவிட்டால் அதற்கு நாம் பொறுப்பு
சூரிச் மாநாட்டின் பின்னணியில் பிரிட்டன்
சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரில் இடம் பெற்ற மாநாடு பிரித்தானியத் தமிழ் அமைப்பு ஒன்றினாலேயே நடத்தப்பட்டது. அதன் பின்னணியில் பிரித்தானிய அரசு இருந்ததெனக் கூறப்பட்டது.
தற்போது ஆட்சியில் உள்ள இலங்கை அரசை கவிழ்விப்பதற்கான திட்டம் தான் இந்த மாநாடு. அந்த மாநாட்டில் சரியான நிகழ்ச்சி நிரல் இல்லை. எமது பிரச்சினைகளைப் பற்றி பேசு வதற்கு வெளிநாட்டவர் நிகழ்ச்சி நிரல் போட முடியாது.
கடந்த காலங்களில் நடை பெற்ற சமாதானப் பேச்சுக்கள் தோல்வியில் முடிந்தமைக்கு வெளிநாடுகள் நிகழ்ச்சி நிரல் தயாரித்தமையே காரணம். அந்த சூரிச் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை முன் வைத்தனர். எல்லோரும் சேர்ந்து ஒரு கருத்தை முன்வைக்க முடியவில்லை.
13 ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்து ஆரம்பித்துப் படிப்படியாக முன்னேற வேண்டும் என்ற கருத்தையே நான் முன்வைத்தேன்.
நாம் எடுத்த உடனே புரியாணி கேட்கமுடியாது. முதலில் எமது வயிற்றுப் பசிக்கு கஞ்சி வேண்டும். அதனைக் குடித்துக் களைப்பாறிய பின்னர் சோற்றைக் கேட்கலாம். அதன் பின்னர் புரியாணி கேட்கலாம்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அரசுடன் பேரம் பேசியுள்ளார். நான் இலங்கைக்குத் திரும்பிவரக் கூடிய நிலையை ஏற்படுத்தினால் அரசுக்கு ஆதரவு வழங்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் ஐக்கியம் இல்லாமையால் அனைவரும் ஒன்றிணைந்து பேரம் பேச முடியாத நிலை உள்ளது. கடந்த காலங்களில் நாம் ஐக்கியப்பட்டு நின்றும் என்ன நடந்தது?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஐக்கியப்பட்டார்கள். ஆனந்தசங்கரி, சித்தார்த்தன், ஸ்ரீதரன் ஐக்கியப்பட்டார்கள். எதைச் சாதிக்க முடிந்தது?
ஆயுதப் போராட்டம் எமது மக்கள் அனைத்தையும் இழந்து கையேந்தும் நிலைக்கும் கொண்டு வந்து விட்டுள்ளது.

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.