Wednesday, December 30, 2009

புலிகளுக்குச் சொந்தமான 10 விமானங்களை பெற்றுக் கொள்ள அரசு எடுத்த முயற்சி தோல்வி

எரித்திரியாவில் இருப்பதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 10 இலகு ரக ஸ்லின் 143 இசட் விமானங்களின் உரிமையைப் பெற்றுக்கொள்ள இலங்கை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்திருப்பதாக நம்பத் தகுந்த தரப்புத் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த விமானத்திற்கான உரிமை மற்றும் பொறுப்பு என்பவற்றை அரசாங்கத்தினால் உறுதிப்படுத்த முடியாது போனதால் அந்நாட்டு விமான நிலைய அதிகாரிகள் விமானங்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

எரித்திரியாவில் விடுதலைப்புலிகளுக்குச் சொந்தமான 10 விமானங்கள் இருப்பதாக அரச புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியிருந்த போதிலும் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக அங்கு சென்ற விமானப்படை மற்றும் அரச அதிகாரிகள் எரித்திரிய விமான நிலையத்தில் விடுதலைப் புலிகளின் ஆறு விமானங்கள் மாத்திரம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நான்கு விமானங்கள் கட்டணங்கள் செலுத்தப்பட்ட பின்னர் பிறிதொரு நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக எரித்திரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானங்களின் உரிமை மற்றும் பொறுப்பாளிகள் யார் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவற்றை விமான நிலையத்திலிருந்து எடுத்துச் செல்ல அனுமதித்ததாகவும் அந்த விமான நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னரே இந்த நான்கு விமானங்கள் எரித்திரியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வகை விமானங்களையே புலிகள் போர் விமானங்களாக மாற்றியமைத்துத் தாக்குதலில் பாவித்திருந்தார்கள் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில், ஸ்லின் ரக விமானங்களை உற்பத்திசெய்யும் சொக்கோஸ்லோவிக்கியாவிடமிருந்து இரண்டு விமானங்களை தனியாகக் கொள்வனவு செய்து அதனைத் புலிகளின் விமானம் எனக் காட்டித் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த வகையில் அன்மையில் விடுதலைப்புலிகளின் கப்பலாக கூறப்பட்டு, கொழும்புக்கு கொண்டு வரப்பட்ட “பிறின்ஸஸ் கிறிஸன்டா” கப்பல், தற்போது பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எடுத்துச் செல்லப்பட்ட விமானங்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டன எனவும் இலங்கை புலனாய்வுத்துறை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.