Saturday, November 14, 2009

தமிழர்களை மீட்க மறுத்த இந்திய அரசு ராஜபக்சவை மட்டும் காப்பாற்ற துடிப்பது ஏன்? பழ.நெடுமாறன் அறிக்கை


இலங்கையில் தமிழர்களை மீட்க மறுத்த இந்திய அரசு ராஜபக்சவை மட்டும் காப்பாற்ற துடிப்பது ஏன்? என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் இராணுவப் புரட்சி ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், தனது ஆட்சியைக் காப்பாற்ற இந்தியப் படையை அனுப்புமாறு இந்திய அரசுக்கு ராஜபக்சே விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்தியப் படை அக்டோபர் 15ஆம் திகதி ஆயத்த நிலையில் வைக்கப்பட்டதாக இலங்கை கூட்டுப்படைத் தளபதி பொன்சேகா அனுப்பியுள்ள தனது பதவி விலகல் கடிதத்தில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

கடந்த இரு நாட்களுக்கு முன்பாக ராஜபக்சவை நேரில் சந்தித்த போதும் பொன்சேகா கூறியபோது அதை மறுக்கும் வகையில் ராஜபக்ச எதுவும் கூறவில்லை என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையில் போரின் இறுதிக் கட்டத்தில் சிங்கள இராணுவத்தினால் சுற்றி வளைத்துக் கொல்லப்பட்ட மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக தலையிடுமாறு இந்திய அரசை தமிழக மக்கள் ஒன்றுபட்டு வற்புறுத்தியபோது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிட முடியாது என இந்தியப் பிரதமர் மறுத்தார்.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்கள் பதைக்க பதைக்க படுகொலை செய்யப்பட்டபோதும், தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தொடர்ந்து கொல்லப்பட்ட போதும் இராணுவ ரீதியாகத் தலையிட மறுத்து இந்திய அரசு ராஜபக்சவைக் காப்பாற்ற படையை ஆயத்த நிலையில் வைத்தது என்ற செய்தி தமிழர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

மேலும் இலங்கைக்கு இராணுவ ரீதியாக உதவி எதுவும் செய்யவில்லை என்று இடைவிடாமல் மறுத்த வந்த இந்திய அரசு, தான் கொடுத்த இரு போர்க்கப்பல்களை திரும்பக் கேட்டுள்ளது என்ற செய்தியும் இந்திய அரசின் உண்மை உருவத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.

தமிழக மக்கள் இனியாவது இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்று தனது அறிக்கையில் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.