Thursday, November 15, 2007

யாழில் மனிதப் பேரவலம் தலை விரித்தாடுகிறது : பொதுமக்களின் ஒன்றியம்

[வியாழக்கிழமை, 15 நவம்பர் 2007] யாழில் மனிதப் பேரவலம் தலைவிரித்தாடுகிறது என்று யாழ். மாவட்ட பொதுமக்களின் ஒன்றியம் குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை (13.11.07) யாழ். மாவட்ட பொதுமக்கள் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.மயில்வாகனம் வெளியிட்டுள்ள அறிக்கை: மனிதப் பேரவலம் தலைவிரித்துத் தாண்டவமாடும் யாழ். குடாநாட்டில் அல்லல் சுமந்த வாழ்வினை ஆறு இலட்சம் மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அராஜகத்தின் உஷ்ணத்தினைத் தாங்க முடியாது தவித்து வரும் குடாநாட்டு மக்களின் அவலங்களை முடித்து வைக்க வேண்டும் என்ற எண்ண மாற்றம் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட்ட சாத்தியங்கும் இல்லை. இந்நிலையின் நீடிப்புக்கு எதிராக சர்வதேசம் எந்தவிதமான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுப்பதாகத் தெரியவில்லை. அரசின் திட்டமிட்ட இனவழிப்பு சதித் திட்டம் குடாநாட்டில் செவ்வனே அரங்கேறி வருகின்றது. தினமும் குருதியில் நனைந்த வண்ணம் மயான பூமியாக, மரண ஓலங்கள் நிறைந்த பிராந்தியமாக குடாநாடு தென்படுகின்றது. கொலைகள், கடத்தல்கள், சித்திரவதைகள் என உச்சத்தில் நிற்கும் மனித உரிமை மீறல்களை கொண்டுவரப்படாத நிலையில் உலகினை விட்டு ஒரு கூட்டமும் எங்கு போகின்றோம் என்று தெரியாமல் ஒரு கூட்டமும் கொடூரங்களின் பீதியில் ஊரைவிட்டு ஒரு கூட்டமும் அகன்று கொண்டிருக்க மனம் விட்டு வாழ்வை நொந்து நடைப்பிணங்களாக ஏனைய குடாநாட்டு மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய துயர நீடிப்புக்குள் தமிழ் மக்களினுடைய அடையாளமாகத் திகழும் கலாச்சாரம் சீரழிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் குடாநாட்டின் தென்பட தொடங்கியுள்ளன. உலகப் போராட்ட வரலாறுகளில் ஆக்கிரமிப்பு இராணுவங்கள் அத்தகைய சீரழிப்புகளை மெற்கொண்டிருந்ததும் அதன்மூலம் அடக்கப்பட்ட இனத்தினது நெடிய வரலாற்றில் மறக்க முடியாத வடுக்களை சுமந்திருப்பதையும் நாம் காணக்கூடியதாக உள்ளது. அதே துர்ப்பாக்கிய நிலைமை இன்று யாழ். குடாநாட்டில் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இன்று குடாநாட்டில் நிலைகொண்டுள்ள நாற்பதினாயிரம்ச் சிறிலங்காப் படையினரால் தோற்றுவிக்கப்பட்டு வருவதை ஊடகங்களில் வெளிவராத, மக்களால் அறியப்பட்ட பெண்கள் மீதான வன்முறை முயற்சிகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன. அவை நாளுக்கு நாள் முனைப்புப் பெற்று வருவதனையும் காண முடிகின்றது. இது தொடர்பாக பொதுமக்கள் மிக அவதானமாக இருப்பதோடு பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் செல்கின்ற பிள்ளைகளின் பாதுகாப்பினை பெற்றோர் உறுதிப்படுத்துமாறும் பெண்கள் தனித்து வீடுகளில் இருப்பதனை தவிர்த்துக் கொள்ளுமாறும் பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியங்கள் தென்படும் பட்சத்தில் அதில் இருந்து சாதுரியமாகத் தப்பித்துக் கொள்ள முயற்சித்துக் கொள்ளுமாறும் வேண்டுகின்றோம். இத்தகைய கொடிய வன்முறைகள் அரசுக்கும் இராணுவத்துக்கும் ஒருபோதும் கீர்த்தியினை ஏற்படுத்தித் தராது என்பதையும் உலகில் கடைசித் தமிழன் உள்ளவரை மறக்க முடியாத சிங்களத்தின் கொடூரங்களின் பட்டியலுக்கு அணிசேர்த்து நிற்கும் என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டு யாழ். குடாநாட்டில் நிலைகொண்டுள்ள படையினரை பூரணமாகக் கட்டுப்படுத்தி குடாநாட்டு மக்களினை வாழ அனுமதிக்குமாறு இலங்கை இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி சந்திசிறியிடம் யாழ். குடாநாட்டு மக்கள் சார்பாக வேண்டி நிற்கிறோம். இத்தகைய வன்முறைகளால் பாதிக்கப்படும் இனங்கள் வெகுண்டெழுந்து அடக்குமுறையாளர்களை சுட்டெரித்த சம்பவங்கள் உலகில் நடந்தேறி வருவதையும் இதன் மூலம் நினைவுபடுத்துகின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.