Sunday, December 18, 2016

இலங்கையில் முக்கியஸ்தர்களை கொலை செய்ய திட்டமா? சீன நாட்டு பிரஜை கைது

குறிபார்த்து சுடும், மாப்பியாக்களுடன் தொடர்புடைய சீன நாட்டு பிரஜை ஒருவர், கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் மிக முக்கியஸ்தர்களை கொலை செய்யத் திட்டமிட்டாரா என்பதனை உறுதி செய்து கொள்ளும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பில் உள்ள பிரபல கெசினோ நிலையம் ஒன்றில் பணி செய்யும் Ni Ma Ze Ren என்ற சீன நாட்டு பிரஜையே குற்றப் புலனாய்வு பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்றில் தொழில் செய்வதற்காகவே தான் இலங்கை வருகைத்தந்துள்ளதாக குறித்த நபர் குறிப்பிட்டுள்ள போதிலும், அவர் சீன நாட்டு சூதாட்டக்காரர்களால் நடத்தப்படும் கசினோ நிலையம் ஒன்றில் பணியாற்றியுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது
குறித்த சீன நாட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, அவரது சுற்றுலா விசா காலாவதியாகியிருந்தது என்று புலனாய்வு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Ni Ma Ze Ren துப்பாக்கி சூட்டுப் பயிற்சி பெற்றவர் எனவும், முக்கிய பிரபுக்களை இலக்கு வைக்கும் கூலிப்படை மாபியா குழுக்களுடன் தொடர்புடையவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த சீன நாட்டு பிஜை ஜனாதிபதி இல்லம், அலரி மாளிகை, மற்றும் மிக முக்கியஸ்தர்கள் வசிக்கும் மொனாச், கிரெஸ்காட் உள்ளிட்ட அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதிகளுக்கு அருகில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலேயே வசித்தார் என தெரியவந்துள்ளது.
Renஇன் மனைவி சீனாவில் அரச புலனாய்வாளராக பணியாற்றுவதோடு, தென்பகுதி மற்றும் ஏனைய பகுதி அரசியல்வாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் கொழும்பில் வசிப்பதற்காக நோக்கத்தை கண்டுபிடிப்பதற்கு விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள் முயற்சிப்பதோடு, அவர் இலங்கையில் தொடர்பில் இருந்த தொலைப்பேசி இலக்கங்கள் தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் எந்த நேரத்திலும், ஆட்சி மாற்றம் ஏற்படும் என மூத்த அரசியல்வாதிகள் சிலர் கூறி வருகின்ற நிலையில், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சூழ்ச்சி திட்டத்தில் சீன நாட்டு பிரஜை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருக்கலம் என சந்தேகிக்கப்படுகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.