பாதுகாப்பு வலையத்தில் தொடர் விமான தாக்குதல்
50 பொதுமக்களை கொன்றாலும் பரவாயில்லை ஒரு புலியை காயபடுத்துவோம் அல்லது கொல்வோம் என்ற இலக்கில் அரச படைகள் செயற்பட்டன. கூடவே வன்னி மக்கள் நீண்டகாலமாக ஆயுத போராட்டத்தின் தூண்களாக இருந்தவர்கள் என்பதனால் அவர்களில் கணிசமான அளவினை முடித்தே ஆகவேண்டும் என்பதிலும் சிங்கள அரசு உறுதியாக இருந்தது.
இன்றைய (23.04.2009)இந்திய அதிகாரிகளின் அறிக்கை
இந்த நிலையில் வழமையான பாணியில் இந்தியாவின் கூலிகளான எம்.கே நாராயணனும் (பாதுகாப்பு ஆலோசகர்), சிவசங்கர் மேனன்( வெளிவிவகார செயலர்) ஆகியோர் முதலை கண்ணீர் வடித்து ஓர் அறிக்கை விட்டனர். அதாவது தமிழ் நாட்டு தமிழர்களை ஏமாற்றுவதற்காகவே இந்த அறிக்கை.
இந்த அறிக்கையில் பாதுகாப்பு வலையத்தில் தாக்குதல் நடப்பதும் அங்கு மக்கள் கொல்லப்படுவதும் கவலை அளிப்பதாகவும் கூறப்பட்டது. இதற்கு இலங்கை அரசாங்கமும் ஓமோம் நாங்கள் கொஞ்சம் கவனமாக அடிக்குமாறு எங்கள் படைகளுக்கு அறிவிக்கின்றம் என கூறியது. வேடிக்கை என்னவெனில் இதனை தமிழ் நாட்டு அரசாங்கம் ஏற்றுக்கொண்டதே.
பான் கி மூனின் மனிதாபிமான குழு திட்ட முன்மொழிவு
இதே வேளை பான் கி மூன் அவர்கள் உடனடியாக பாதுகாப்பு வலையத்திற்குள் சிக்கியுள்ள மக்களை மீட்க இலங்கைக்கு மனிதாபிமான குழு ஒன்றினை அனுப்ப போவதாக கூறி இருந்தார். ஆனால் அதனை எப்படி எவ்வாறு செய்வது என்பதனை கூறவில்லை. அதனால் இதுவும் ஓர் இழுத்தடிப்பாகவே இருந்தது. அதாவது திட்டங்களை கூறுவதன் மூலம் பிறர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தாமதமாக்குவதே இதன் நோக்கம். உண்மையிலேயே பான்கி மூன் சொன்ன உடனேயே மனிதாபிமான குழுவினை முள்ளிவாய்க்காலிற்கு அனுப்பி இருந்தால் நாளை (25.04.2009) நடைபெறவிருந்த மிக கொடூரமான தாக்குதலினை நிறுத்தி இருக்க முடியும் ஏன் முள்ளிவாய்க்காலில் இறுதியில் நடந்தேறிய படுகொலைகளும் நிறுத்தப்பட்டிருக்கும்.
பிரித்தானியாவின் பிரயோசனமில்லா அறிக்கையும் பிரித்தானிய தமிழர்களும்
இதே வேளை பிரித்தானியாவின் வெளியுறவு செயலர் டேவிட் மில்லிபாண்ட் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுப்பதாக கூறி முன்னைய அறிக்கை ஒன்றினை திகதிமாற்றம் செய்து விட்டிருந்தார். அதாவது பிரிட்டன் இலங்கை அரசினை ; மக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்குமாறு தாம் அழுத்தம் கொடுப்பதாக அந்த அறிக்கை இருந்தது. இறுதிவரை இலங்கை அரசு எதற்கும் தலை சாய்க்காது என தெரிந்தும் கூட மீண்டும் மீண்டும் இவ்வாறான அறிக்கைகளை வெளியிட்டு கொண்டிருந்தமை பிரித்தானிய தமிழர்களை ஏமாற்றி தமக்கு ஆதரவு தேடும் முயற்சியே தவிர வேறெதுவும் இருப்பதாக தெரியவில்லை.
அடுத்ததாக பிரித்தானிய பாராளுமன்றம் ஏப்ரல் 29, 2009 அன்று பராளுமன்றில் இலங்கை நிலவரம் தொடர்பில் விவாதம் நடத்துவதாக இன்று அறிவித்தது. பிரித்தானிய தமிழர்கள் அந்த விவாதத்தில் ஏதாவது முன்னேற்றம் கிடைக்குமா என ஏங்கி எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இளையோர்கள் இவற்றை எதிர்பார்க்காது வீதியில் இறங்கி போராடிக்கொண்டிருந்தனர்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையும் நம்பியாரும்
இன்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை ( 15 நாடுகள்) கூடியது. இதில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக்கு இலங்கை சென்றிருந்த நம்பியார் தனது அறிக்கயினை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் அவர் மூடிய அறைக்குள் தான் தனது அறிக்கயினை வாசிப்பார் அதாவது அவரது அறிக்கை பகிரங்கமாக இருக்காது என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே நம்பியாரின் அசைவில் நம்பிக்கையற்று இருந்த தமிழர்களும் மனித உரிமை அமைப்புக்களும் மூடிய அறையில் அறிக்கை வாசிக்கப்படும் என்று கேள்விப்பட்டதும் இருந்த சிறிது நம்பிக்கையும் போய்விட்டது.
நம்பியார் மூடிய அறையில் தனது அறிக்கையினை தாக்கல் செய்தார். அதன் பின்னர் பாதுகாப்பு சபை கூடி ஓர் அறிக்கை விட்டது. அந்த அறிக்கையினை (23.ஏப்ரல் 2009) பாதுகாப்பு சபைக்கு தலைவராக இருக்கும் மெக்சிக்கோ நாட்டவரான கிளவுட் ஹெல்லெர் வாசித்தார்.
அந்த அறிக்கையில் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைய வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான மீட்பு பணிகளுக்கு உதவ வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கூடவே இலங்கை அரசும் சர்வதேச சட்டங்களை மதித்து நடக்கவேண்டும் என்றும் கூறியது. ஆனால் போரை நிறுத்துமாறு அரசாங்கத்தினை கேட்கவில்லை.
இதே வேளை போர் நிறுத்தம் ஒன்றை அறிவித்து மக்களை வெளியேற்ற தாம் தயாராக இருப்பதாக புலிகள் அறிவித்தனர். ஆனால் அனைத்துலகம் போரை நிறுத்தாமல் மக்களை வெளியேறுமாறு கேட்டது. பல தடவை மக்கள் வெளியேறியபோது அந்த மக்கள் மீது விமான தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான வீடியோ, புகைப்பட ஆதாரங்கள் உள்ளன. கூடவே புலிபோராளிகளும் மக்களை தாக்கியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மக்களை வெளியேற்ற வேண்டுமாயின் போர் நிறுத்தம் அவசியம் என்பதனை அனைத்துலகம் விளங்கவில்லையா அல்லது வேணும் என்றே விட்டார்களா?
24 ஏப்ரல் 2009
இன்றும் விமானத்தாக்குதல்கள் கடற்கரையோரங்களில் நடந்தன கூடவே கடலாலும் தரையாலும் மக்கள் மற்றும் போராளிகள் தப்பி செல்லலாம் என்றும் அத்துடன் உணவு மருந்து வினியோகங்களை தடுப்பதற்காகவும் பாதுகாப்பு வலையத்தினை சூழ தாக்குதல்கள் நடந்த வண்ணம் இருந்தது. கடந்த நான்கு நாட்களாக உணவோ, நல்ல குடினீரோ இன்றி மக்கள் பலர் மயக்கமுற்ற நிலையில் இருந்தனர். பலர் பதுங்கு குழிக்குள்ளேயே தமது விதி இதுதான் என படுத்துறங்கிய வண்ணம் உயிரை விட்டனர். காயப்பட்டோரை மருத்துவ அதிகாரிகள் மட்டுமன்றி காயப்பட்டோரின் உறவினர்கள் கூட கைவிட்டு விட்டனர். அவர்களால் கடவுளை மறாடுவதனை விட வேறு எதனையும் செய்ய முடியவில்லை. அவரவர் தமக்கு வேண்டிய கடவுளரை மன்றாடிய வண்ணம் இருந்தனர்.
இந்திய அமைச்சர் சிதம்பரத்தின் அறிக்கை
இந்திய அமைச்சர் சிதம்பரம் இன்று ஓர் இணைய தளத்திற்கு பேசுகையில் இலங்கை அரசாங்கம் புலிகளை விட கொஞ்சம் மோசமாகவே செயற்படுவதாக கூறினார். இலங்கை அரசும் புலிகளும் போரை நிறுத்துவதில் அக்கறை காட்டவில்லை; இந்தியாவின் சொல்லை கேட்கவில்லை என்று கூறினார். கூடவே கொழும்பு இராணுவ தீர்வினையே முன் நிறுத்தி இருப்பதாகவும் கூறினார். ஆனால் சிதம்பரம் அவர்களுக்கு புலிகள் எப்போதே போர் நிறுத்தம் செய்ய தயார் என அறிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆனால் சிவசிதம்பரத்தின் இந்த பேச்சு அவர் தேர்தலில் நிற்கப்போகும் சிவ கங்கை தொகுதியில் வேட்பு மனு தாக்குதல் செய்ய வந்த போதே பேசினார். ஆகவே அவரும் எவ்வாறு தமிழ் நாட்டு தமிழர்களை ஏமாற்றி வாக்கு பெறலாம் என்ற வகையில் தான் கொழும்பை சாதுவாக சாடி பேசிவிட்டு சென்றார்.
மஹிந்த - நாராயணன் - சிவசங்கர் மேனன் சந்திப்பு
இந்திய தேர்தல் நெருங்கும் வேளை இந்திய வெளிவிவகார செயலர் சிவசங்கர் மேனன், பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் ஆகியோர் கொழும்பில் இன்றைய தினம் மஹிந்தவுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர். 90 நிமிடம் நடைபெற்ற சந்திப்பில் என்ன கதைத்தார்கள் என்பதனை இந்திய அதிகாரிகள் இருவரும் கூற மறுத்துவிட்டனர். ஆனால் இலங்கை அரசு கூறியது என்னவெனில் பேச்சு வார்த்தை நன்றாக இடம்பெற்றது. கூடவே போர் நிறுத்தம் பற்றியோ பேச்சுவார்த்தைபற்றியோ எதுவும் கலந்துரையாடப்படவில்லை என்றும் தகவல் வெளியானது. ஆனால் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் வெற்றிக்கு பாதிப்பு இல்லாமல் தாக்குதலை செய்யுமாறு தான் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தகவல் கசிந்தது.
ஆனால், இதே வேளை இந்திய வெளி நாட்டமைச்சர் பிரணாப் முகர்ஜீ பத்திரிகையாளர்களுக்கு இன்றைய தினம் கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் தொடரும் வன்முறைகளும் பொதுமக்கள் கொல்லப்படுவதும் தமக்கு சந்தோசத்தினை தருவதாக இருக்காது என்றும். ஆகவே உடனடியாக போர் நிறுத்தத்தினை கொண்டுவரவேண்டும் என்றும் பேச்சளவில் கூறினார்.
இன்னர் சிற்றி பிறஸ் கேள்வி கணைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
இன்று நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பத்திரிகையாளர் கேள்வி நேரத்தில் இன்னர் சிற்றி பிறெஸ் பல கேள்விகளை கேட்டது. அதில் முக்கியமாக அவர்கள் கேட்டது என்னவெனில்
நம்பியார் இலங்கை சென்று திரும்புகையில் இந்தியா சென்று வந்துள்ளார். அவர் அங்கே யாரை சந்தித்தார்? எந்த தலைவரை சந்தித்தார்?
டாபூரில் பல என்.ஜி.ஓ க்கள் வெளியேறியமைக்கு ஐக்கி நாடுகள் சபை நடவடிக்கை எடுத்தது. ஆனால் முள்ளிவாய்க்காலிற்குள் இருந்து சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உட்பட பலர் வெளியேற்றப்பட்ட நிலையில் ஏன் ஐக்கிய நாடுகள் நடவடிக்கை எடுக்கவில்லை?
முள்ளி வாய்க்காலிற்குள் இருந்து அரச வைத்தியர்களை வெளியேறுமாறு அரசாங்கம் பணித்துள்ளது. ஆகவே இதனை ஏன் ஐ. நா கேட்கவில்லை?
இவ்வாறு பல கேள்விகளை ஐக்கிய நாடுகள் சபை துணை பேச்சாளர்களான மேரி ஒகாபே மற்றும் மிஸ் பிக் ஆகியோரை கேட்டனர்.
ஆனால் இந்த பேச்சாளர்கள் பான் கி மூன் பல தடவை அறிக்கைகள் விட்டிருக்கின்றார் என்று கூறி மழுப்பினரே தவிர சரியான விடைகளை கொடுக்க முடியவில்லை.
இதே வேளை ஐக்கிய நாடுகள் சபை இன்று வரை 6500 சிவிலியன்கள் கொல்லப்பட்டும் 14,000 பேர் காயப்பட்டும் உள்ளதாக கூறியுள்ளது.
25 ஏப்ரல் 2009
இன்று வலைஞன் மடம் பகுதியில் கஞ்சி பெறுவதற்காக கூடி இருந்த மக்கள் மீதும் கடற்கரை பகுதியில் கூடாரத்தினுல் இருந்த காயப்பட்ட மக்கள் மீதும் இலங்கை விமானப்படை கோரமாக குண்டுகளை வீசியது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைக்கு சவாலாகவோ அல்லது அவற்றை புறக்கணிப்பதற்காகவே தான் இந்த தாக்குதல் அமைந்திருக்கவேண்டும்.
மிக், கிபிர் விமானங்களின் இந்த தாக்குதலில் 341 அப்பாவின் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். 400 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த பகுதியில் காலை தொடக்கம் மாலை வரை முறையே காலை 10.15 மதியம் 2.15 , 2.30, பின்னேரம் 5.15 ஆகிய நேரங்களில் விமானத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் 184 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2.15 அளவில் முள்ளிவாய்கால் மேற்குபகுதியில் மேற்கொள்ளப்பட்ட விமான தாக்குதலில் 126 பேர் கொல்லப்பட்டனர் இந்த நடவடிக்கை சுமார் 15 நிமிடம் மேற்கொள்ளப்பட்டது 16 இற்கு மெற்பட்ட 250 இறாத்தல் குண்டுகள் போடப்பட்டதாக கள படப்பிடிப்பாளர் பதிவாக்கியுள்ளார்.
இதே வேளை மாலை 5.15 இற்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 48 பேர் கொல்லப்பட்டனர். இன்று மாலை புனர்வாழ்வுக்கழகத்தால் கஞ்சி வழங்கப்பட்டதுடன் கூடவே உலர் பருப்பும் குழந்தைகள் உள்ள குடும்பங்களிற்கு நிவாரணமாக வழங்கப்பட்டது.













0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.